இந்த மேட்ச கொஞ்சம் முன்னாடியே முடிச்சிருக்கணும் : கோலி அட்வைஸ்
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 3வது டி 20 போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்ற நிலையில், ஆட்டத்தை இன்னும் வேகமாக முடித்திருக்க வேண்டும் என விராட் கோலி கருத்து தெரிவித்துள்ளார்.
விராட் கோலி
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 3-வது டி20 போட்டியில் 187 ரன்கள் இலக்கை இந்திய அணி வெற்றிகரமாக விரட்டியதில் சூரியகுமார் யாதவ், விராட் கோலியின் வாணவேடிக்கை அரைசதங்கள் ரசிகர்களைக் குஷிப்படுத்த இந்திய அணி வெற்றி பெற்று தொடரை கைப்பற்றியது.
ரோஹித் சர்மா ஆட்டமிழந்தவுடன் 30/2 என்ற நிலையில் ஜோடி சேர்ந்த சூரியகுமார் யாதவ் 5 பவுண்டரி 5 சிக்சர்களுடன் 36 பந்துகளில் 69 ரன்களை விளாச, விராட் கோலி 48 பந்துகளில் 3 பவுண்டரி 4 சிக்சர்களுடன் பொறுப்பாக ஆடி 104 ரன்களை சுமார் 10 ஓவர்களில் சேர்த்தனர்.
கடைசியில் ரன் சேர்க்க சிரமப்பட்ட ஹர்திக் பாண்டியாவுக்கு அதிர்ஷ்டம் கை கொடுக்க, ஆஸ்திரேலியாவின் பீல்டிங் செட் அப் சொதப்பலாக அமைய கடைசி பவுண்டரியுடன் 16 பந்தில் 25 ரன்கள் எடுத்து வெற்றி பெற செய்தார்.
போட்டி கடைசி பந்து வரை சென்றிருக்கக் கூடாது
இதில் கடைசி ஓவரில் விராட் கோலி முதல் பந்திலேயே டேனியல் சாம்ஸை ஒரு தூக்குத் தூக்கி சிக்சர் விளாசிய நிலையில், ஆட்டம் இந்தியாவுக்குச் சாதகமானது.
அடுத்த பந்தே கோலி அவுட் ஆனது கொஞ்சம் கவலையளித்தாலும் அந்த சிக்ஸ் உண்மையில் வெற்றி பெற காரணமாக அமைந்தது. இது தொடர்பாக விராட் கோலி கூறும்போது, போட்டி கடைசி பந்து வரை சென்றிருக்கக் கூடாது. கடைசி ஓவரில் 4 அல்லது 5 ரன்கள்தான் சேஸ் செய்யுமாறு இருக்க வேண்டும்.
ஒரு பவுண்டரியை அடித்து விட வேண்டும் என்பதே கடைசி ஓவரில் என் கவனமாக இருந்தது, நல்ல வேளையாக அது சிக்ஸ். அணிக்காக பங்களிப்பு செய்ததில் மகிழ்ச்சியடைகிறேன். நான் கிரிக்கெட்டிலிருந்து பிரேக் எடுத்துக் கொண்டு வலைப்பயிற்சியில் கடுமையாக பயிற்சி செய்திருக்கிறேன்.