என்ன பத்தி பேசனும்னா என்கிட்ட வந்து பேசுங்கடா - பதிலடி கொடுத்த விராட் கோலி
தொடர்ந்து எழுந்து வந்த விமர்சனங்களுக்கு தக்க பதிலடி கொடுத்திருக்கிறார் விராட் கோலி.
நேற்று நடைபெற்ற ஆசிய கோப்பை தொடர் கிரிக்கெட் போட்டியில் பாகிஸ்தான் அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் இந்திய அணியை வீழ்த்தி த்ரில் வெற்றி பெற்றது.
பாகிஸ்தான் - இந்திய மோதல்
ஆசிய கோப்பை 20 ஓவர் கிரிக்கெட் தொடரின் சூப்பர் 4 சுற்றின் 2வது போட்டியில் இந்திய அணியும், பாகிஸ்தான் அணிகள் மோதின. இதில் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது.
இதனையடுத்து முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 181 ரன்கள் எடுத்தது. இந்திய அணியில் அதிகபட்சமாக விராட் கோலி 60 ரன்களும், கே.எல் ராகுல் மற்றும் ரோஹித் சர்மா தலா 28 ரன்களும் எடுத்தனர்.
பாகிஸ்தான் அணி சார்பில் அதிகபட்சமாக ஷாதப் கான் 2 விக்கெட்டுகளை கைப்பற்றினார் மற்ற பந்துவீச்சாளர்கள் அனைவரும் தலா 1 விக்கெட்டை கைப்பற்றினர்.
தடுமாறி இந்திய அணி - தக்க வைத்த பாகிஸ்தான்
இதன்பின் 182 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற எட்டக்கூடிய இலக்கை துரத்தி களமிறங்கிய பாகிஸ்தான் அணிக்கு அந்த அணியின் முக்கிய வீரரான பாபர் அசாம் 14 ரன்களில் விக்கெட்டை இழந்து ஏமாற்றம் கொடுத்தார்.
பின்னர் களம் இறங்கிய முகமது நவாஸ் 20 பந்துகளில் 42 ரன்கள் எடுத்து கொடுத்தார். நீண்ட நேரம் தாக்குபிடித்து வழக்கம் போல் மிக சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய முகமது ரிஸ்வான் 52 பந்தில் 71 ரன்கள் எடுத்து கொடுத்தார்.
இதையடுத்து பாகிஸ்தான் அணி 19.5 ஓவர் முடிவில் 5 விக்கெட் வித்தியாசத்தில் இந்திய அணியை வீழ்த்தி அபார வெற்றி பெற்றது.
பதிலடி கொடுத்த விராட் கோலி
பாகிஸ்தான் அணியின் தோல்வி குறித்து பேசிய விராட் கோலி தன் மீதான விமர்சனங்கள் குறித்தும் பேசியுள்ளார்.
இது குறித்து விராட் கோலி பேசுகையில், “என்னை பற்றி பலரும் பலவிதமாக பேசி வருகின்றனர். ஆனால் அதை பற்றி எல்லாம் எனக்கு சிறிதும் கவலை இல்லை.
நான் யாரிடமாவது எதாவது சொல்ல வேண்டும் என நினைத்தால் அவர்களிடம் நேரடியாகவே தான் சொல்வேன், அவர்களை பற்றி வேறு எங்கும் பேச மாட்டேன்.
அதே போல் என்னை பற்றி பேசுபவர்கள் என் மீது அக்கறை இருந்தால் என்னிடம் நேரடியாக பேசுங்கள், ஆனால் என்னை பற்றி என்னிடம் பேசாமல் ஒட்டுமொத்த உலகத்திற்கும் முன்னாள் பேசினாலும் அதனால் எனக்கு எந்த பிரச்சனையும் இல்லை, அது என்னை எந்த வகையிலும் பாதிக்காது” என்று தெரிவித்தார்.