விராட் கோலி எதிரணி வீரர்களையும் மதிப்பார் - ரஷித் கான் பெருமிதம்
ஆப்கானிஸ்தான் அணியின் நட்சத்திர சுழற்பந்து வீச்சாளர் ரஷித் கான் இந்திய அணியின் கேப்டன் விராட் கோலியை புகழ்ந்து தள்ளியுள்ளார்.
சமீபத்தில் பேட்டி ஒன்றில், “எந்தவொரு பேட்ஸ்மேனுக்கும் நன்றாக பந்து வீசி நெருக்கடி கொடுக்கும்போது அவர்கள் தனக்கு சாதகமில்லாத ஷாட்களையும் ஆடுவார்கள். ஆனால் இந்திய அணியின் கேப்டன் விராட்- கோலி அப்படி கிடையாது.
எந்த மாதிரியான நேரத்திலும் அவர் தனது இயல்பான ஆட்டத்தையே வெளிப்படுத்துவார். அவர் தனது வழக்கமான பாணி ஆட்டத்தை விடுத்து வித்தியாசமாக எதுவும் செய்யமாட்டார்.
விராட்-கோலி தனக்கு சொந்தமான நடைமுறையில் இருந்து விலகாமல் இருப்பது தான் அவரது மிகச் சிறந்த வெற்றிகரமான செயல்பாட்டுக்கு காரணம் என்று நான் நினைக்கிறேன்.
நல்ல பந்து வீச்சை மதிக்கக்கூடிய அவர், மோசமான பந்து வீச்சை தண்டிக்கவும் செய்வார். விராட் கோலி நல்ல தன்னம்பிக்கை கொண்டவர். சில பேட்ஸ்மேன்கள் தன்னம்பிக்கை இல்லாததால் தான் தடுமாறுகிறார்கள்” என்றார்.
இதே பேட்டியில் ரஷித் கான் தோனி மற்றும் ரோஹித் சர்மாவை புகழ்ந்து பேசியிருப்பது குறிப்பிடத்தக்கது.