யார் யார் எப்படி என்று பொறுத்திருந்து பார்ப்போம் - காத்திருக்கும் விராட் கோலி
பல்வேறு காரணங்களாக எஞ்சியுள்ள ஐபிஎல் தொடரில் இருந்து விலகிய வீரர்களுக்கு பதிலாக தேர்வு செய்யப்பட்டுள்ள வீரர்களின் விளையாட்டையும், திறமையையும் பார்க்க ஆவலுடன் காத்திருப்பதாக பெங்களூர் அணியின் கேப்டனான விராட் கோலி தெரிவித்துள்ளார்.
கொரோனா காரணமாக பாதியில் நிறுத்தப்பட்ட இந்த வருட ஐபிஎல் தொடரின் எஞ்சியுள்ள போட்டிகள், ஐக்கிய அரபு எமிரேட்ஸ் வைத்து நடத்தப்பட உள்ளது.
செப்டம்பர் 19ம் தேதி இந்த தொடர் துவங்க உள்ள நிலையில், ஒவ்வொரு அணி வீரர்களும் துபாய்க்கு படையெடுத்து வருகின்றனர்.
அதே போல் இங்கிலாந்து, ஆஸ்திரேலியாவை சேர்ந்த பெரும்பாலான வீரர்கள் ஐபிஎல் தொடரில் இருந்து விலகியும் வருகின்றனர். ஜானி பாரிஸ்டோ, டேவிட் மாலன், ஜாஸ் பட்லர், கிரிஸ் வோக்ஸ் என அதிகமான முக்கிய வீரர்கள் பலர் அடுத்தடுத்து விலகி கொள்வதாக அறிவித்து வருகின்றனர்.
இதனால் வேறு வழியின்றி ஒவ்வொரு அணியும் தங்களது அணியில் விலகிய வீரர்களுக்கு பதிலான மாற்று வீரர்களை உடனடியாக தேர்வு செய்து அறிவித்து வருகிறது.
இந்தநிலையில், பல்வேறு காரணங்களுக்காக எஞ்சியுள்ள போட்டிகளுக்கான பெங்களூர் அணியில் இருந்து விலகிய வீரர்களுக்கு பதிலாக தேர்வு செய்யப்பட்டுள்ள வீரர்களின் விளையாட்டையும், திறமையையும் பார்க்க ஆவலுடன் காத்திருப்பதாக பெங்களூர் அணியின் கேப்டனான விராட் கோலி தெரிவித்துள்ளார்.
இது குறித்து விராட் கோலி பேசுகையில், ‘‘நான் ஒவ்வொருவருடனும் தொடர்பில் இருந்தேன். நாங்கள் கடந்த மாதத்தில் யார் அணியில் இணைகிறார்கள், வெளியேறுகிறார்கள் என்பதை குறித்து ஆலோசனை நடத்தினோம்.
எங்களுடைய முக்கிய வீரர்கள் வெளியேறிய நிலையில், தரம் வாய்ந்த மாற்று வீரர்களை தேர்வு செய்துள்ளோம். முக்கிய வீரர்களை தவற விடுகிறோம். அவர்கள் எங்கள் ஆர்.சி.பி. குடும்பத்தின் ஒரு பகுதி. ஆனால், புதிதாக அணியில் இணைந்தவர்கள் சிறந்த திறன் கொண்டவர்கள்.
குறிப்பாக இங்குள்ள சூழ்நிலையில் சிறப்பாக செயல்பட கூடியவர்கள். அவர்கள் மொத்த அணியுடன் இணைந்து பயிற்சி மேற்கொள்ள இருப்பதை பார்க்க ஆர்வமாக இருக்கிறேன். அதேபோல் முதல் பகுதியில் சிறப்பாக செயல்பட்டதை போன்று 2-வது பகுதியையும் சிறப்பாக தொடங்க ஆர்வமாக இருக்கிறேன்’’ என்று தெரிவித்துள்ளார்.
விராட் கோலி தலைமையிலான பெங்களூர் அணியில் இருந்து கேன் ரிச்சர்ட்சன், ஆடம் ஜம்பா, டேனியல் சாம்ஸ், ஜாஃப்ரா பின் ஆலன், வாஷிங்டன் சுந்தர் ஆகியோர் விலகியுள்ளனர். அவர்களுக்குப் பதிலாக ஜார்ஜ் கார்ட்டன், வனிந்து ஹசரங்கா, துஷ்மந்தா சமீரா, டிம் டேவிட், ஆகாஷ் தீப் ஆகியோர் சேர்க்கப்பட்டுள்ளனர்.