பொய் சொன்னாரா கோலி? கோலியை போட்டு கொடுத்த தேர்வுக்குழுத் தலைவர்..மீண்டும் சர்ச்சை

India Cricket Team Virat Kohli
By Thahir Jan 01, 2022 02:30 PM GMT
Report

புத்தாண்டில் புதிய தொடக்கம் இருக்கும், பழைய கசப்புகள் மறையும் என்று சொல்வார்கள். ஆனால் விராட் கோலி விவகாரத்தில் தலைக்கீழாகி விட்டது.

இப்போது தான் தென்னாப்பிரிக்க தொடரில் முதல் டெஸ்ட் போட்டியை வென்று பல சர்ச்சைகளுக்கு முற்றுப் புள்ளி வைத்தார் விராட் கோலி.

தற்போது தேர்வுக்குழுத் தலைவர் சேத்தன் சர்மா, முடிந்த பிரச்சினையை மீண்டும் ஒரு செய்தியாளர் சந்திப்பு மூலம் மூடி கிடந்த சந்திரமுகி கதவை சாவி போட்டு திறந்தது போல் புதிய பிரச்சினையை உருவாக்கிவிட்டார்.

டி20 கேப்டன் பதவியை விராட் கோலி ராஜினாமா செய்த நிலையில், அவரிடமிருந்து ஒருநாள் போட்டிக்கான கேப்டன் பதவியும் பறிக்கப்பட்டது.

அப்போது, ஒருநாள் போட்டிக்கு ஒரு கேப்டன், டி20 க்கு ஒரு கேப்டன்என இருக்க முடியாது என்பதால்,

தாங்களே இருப் பிரிவுகளிலும் கேப்டனாக தொடர வேண்டும் என்று விராட் கோலியிடம் கூறியதாக பி.சி.சி.ஐ. தலைவர் கங்குலி கூறினார் ஆனால்,

இது குறித்து விராட் கோலியிடம் கேட்ட போது, அப்படி யாரும் பி.சி.சி.ஐ.யிலிருந்து என்னிடம் பேசவில்லை என்று கூறியிருந்தார்.

இதனால் கங்குலி மீது ரசிகர்கள் கோபமடைந்தனர். கங்குலி பொய் கூறிவிட்டதாக ரசிகர்கள் தெரிவித்தனர்.

இந்த சர்ச்சை தற்போது தான் அணியின் வெற்றி மூலம் முடிவுக்கு வந்தது. ஆனால் வெள்ளி இரவு செய்தியாளர்களை சந்தித்த தேர்வுக்குழுத் தலைவர் சேத்தன் சர்மா, கேப்டன் பதவியை விட்டு விலக வேண்டாம் என்று பி.சி.சி.ஐ.யிலிருந்து விராட் கோலியிடம் கோரிக்கை வைத்தோம்.

டி20யிலிருந்து விலகினால், ஒருநாள் போட்டிக்கும் கேப்டனை மாற்ற நேரிடும் என்று கோலியிடம் தெரிவித்தோம். ஆனால் அவர் தான் அதனை ஏற்கவில்லை என்று கூறியுள்ளார்.

இதனால் கோலி பொய் சொல்லிவிட்டாரா என்ற சர்ச்சை எழுந்துள்ளது. மேலும், ரோகித் சர்மாவுக்கும், கோலிக்கும் எவ்வித மோதலும் இல்லை என்றும், பி.சி.சி.ஐ.யில் அனைவரும் குடும்பமாக தான் செயல்படுகிறோம் என்று பதில் அளித்தார்.

முகமது ஷமிக்கு ஒருநாள் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு அளிக்க உள்ளதாகவும், ஆவேஷ் கான், ஷாரூக்கான், ரவி பிஷ்னாய் போன்ற வீரர்கள் இனி வரும் கிரிக்கெட் தொடரில் பங்கேற்க வாய்ப்பளிக்கப்படும் என்று சேத்தன் சர்மா கூறினார்.