விராட் கோலி கேப்டன் பதவியில் இருந்து நீக்கப்பட்ட இதுதான் காரணமா? - வெளியான தகவல்
இந்திய ஒருநாள் அணியின் கேப்டன் பதவியில் இருந்து விராட் கோலி நீக்கப்பட்டது குறித்து தனது கருத்தை முன்னாள் வீரரான சபா கரீம் தெரிவித்துள்ளார்.
கடந்த 7 வருடங்களுக்கு மேலாக இந்திய அணியை சிறப்பாக வழிநடத்தி வந்த விராட் கோலி நடந்து முடிந்த டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடருக்கு பிறகு டி20 போட்டிகளுக்கான கேப்டன் பதவியில் இருந்து விலக உள்ளதாக திடீரென அறிவித்தார். பேட்டிங்கில் கவனம் செலுத்த வேண்டும் என்பதற்காக இந்த முடிவு எடுக்கப்பட்டதாக அவர் கூறினார்.ரோகித் சர்மா வழிநடத்தியதால், விராட் கோலியை ஒருநாள் போட்டிகளுக்கான கேப்டன் பதவியில் இருந்து நீக்கிவிட்டு ரோஹித் சர்மாவை கேப்டனாக நியமிக்க வேண்டும் என்ற கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டது.
இந்த நிலையில் எதிர்வரும் தென்னாப்பிரிக்க சுற்றுப்பயணத்தில் இருந்து ரோகித் ஒருநாள் போட்டிகளிலும் அணியை வழிநடத்த உள்ளார். கோலி இந்திய டெஸ்ட் அணியை மட்டுமே வழிநடத்துவார் என பிசிசிஐ தெரிவித்தது.
பிசிசிஐயின் இந்த திடீர் முடிவு கிரிக்கெட் வட்டாரத்தில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளதால் முன்னாள் வீரர்கள், கிரிக்கெட் வல்லுநர்கள் விராட் கோலி நீக்கப்பட்டது குறித்தான தங்களது கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
அந்த வகையில் முன்னாள் இந்திய வீரரான சபா கரீம், விராட் கோலி கேப்டன் பதவியில் இருந்து விலகினார் என்பதை விட கேப்டன் பதவியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார் என்று சொல்வதே சரியானதாக இருக்கும். டி20 போட்டிகளுக்கான கேப்டன் பதவியில் இருந்து விலகுவதாக விராட் கோலி அறிவித்த போதே ஒருநாள் போட்டிகளுக்கான கேப்டன் பதவியில் இருந்து விலகுவதாகவும் அறிவித்திருக்க வேண்டும் என கூறியுள்ளார்.
மேலும் என்னை பொறுத்தவரையில் விராட் கோலி இதுவரை ஐசிசியால் நடத்தப்படும் தொடர்களில் கோப்பையை வென்று கொடுக்காததே அவரது இந்த நிலைக்கு காரணம், அதுவே அவரது கேப்டன்சி தரத்தையும் குறைத்துவிட்டது. இந்த திடீர் முடிவு குறித்து பயிற்சியாளர் ராகுல் டிராவிட்டோ அல்லது நிர்வாகிகளோ விராட் கோலியிடம் நிச்சயம் முறையாக பேசியிருப்பார்கள் என நம்புகிறேன். விராட் கோலியிடம் பேசாமல் இப்படி ஒரு பெரிய முடிவை எடுத்திருக்க வாய்ப்பே இல்லை என தெரிவித்துள்ளார்.