'தைரியம் இருந்தா எங்க மேல கைய வச்சிப்பாரு’ - நியூசிலாந்து வீரருக்கு விராட் கோலி சவால்
இந்திய அணியின் வீழ்த்துவது குறித்து நியூசிலாந்து வீரர் ட்ரெண்ட் போல்ட் கூறிய கருத்துக்கு கேப்டன் விராட் கோலி பதிலடி கொடுத்துள்ளார்.
ஐசிசி டி20 உலகக்கோப்பை தொடரில் இந்திய அணி அடுத்ததாக இன்று நியூசிலாந்து அணியை எதிர்கொள்கிறது. இரவு 7 மணிக்கு துபாயில் உள்ள சர்வதேச மைதானத்தில் நடைபெறும் இப்போட்டியில் வெற்றி பெற்றால் மட்டுமே அரையிறுதி வாய்ப்பு கிடைக்கும் என்ற இக்கட்டான சூழலில் தான் இரு அணிகளுமே உள்ளது.
ஏற்கனவே கடந்த 2019ம் ஆண்டு உலகக்கோப்பை அரையிறுதி மற்றும் டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டிகளில் நியூசிலாந்திடம் அடிவாங்கியுள்ளதால் அதனை திருப்பி கொடுக்க வேண்டிய கட்டாயத்திலும் இந்திய அணி உள்ளது.
இந்நிலையில் நியூசிலாந்து வீரர் ட்ரெண்ட் போல்ட் இந்தியாவுடனான ஆட்டம் குறித்து சில கருத்துக்களை தெரிவித்தார். அப்போது பாகிஸ்தான் வீரர் சாஹீன் அஃப்ரிடி, இந்திய அணியின் டாப் ஆர்டரை நாசம் செய்தார். அதனை போலவே நானும் இந்தியாவின் டாப் ஆர்டரை நிலைக்குலைய வைப்பேன். இந்தியாவுக்கு எதிராக கடந்த சில போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளோம். அதனை மீண்டும் செய்வோம் என கூறினார்.
இதற்கு பதிலடி கொடுத்துள்ள விராட் கோலி, கடினமான பவுலர்களுக்கு எதிராக தான் நாங்கள் பேட்டிங் செய்யப்போகிறோம் என்பது உண்மை தான். ஆனால் அது நாம் அன்றைய தினம் அவர்களை எப்படி எடுத்துக்கொள்கிறோம், எப்படி செயல்படுகிறோம் என்பதை பொறுத்துதான் இருக்கிறது.
மேலும் ட்ரெண்ட் போல்ட், பாகிஸ்தான் வீரர் சாஹீன் அஃப்ரிடியை போன்று விளையாடுவேன் எனக்கூறியுள்ளார். ஆனால் நாங்கள் அந்த பவுலிங்கை எப்படி துவம்சம் செய்யலாம் என தயாராகி வருகிறோம். எங்களுக்கு எந்த அச்சமும் இல்லை. அதுபோன்ற பவுலிங்கிற்கு எதிராக நாங்கள் பல ஆண்டுகளாக சிறப்பாக விளையாடி வருகிறோம் எனவும் கோலி தெரிவித்துள்ளார்.