விராட் கோலியின் கேப்டன் பதவி பறிப்பு - இந்திய அணியின் புதிய கேப்டன் இவர்தான்..!
இந்திய ஒருநாள் அணியின் கேப்டன் பொறுப்பிலிருந்து விராட் கோலி அதிரடியாக நீக்கப்பட்டுள்ளார்.
டி20 உலகக்கோப்பை தொடருக்குப் பின் டி20 மற்றும் ஐபிஎல் அணிகளின் கேப்டன் பொறுப்பில் இருந்து விலகிய விராட் கோலி டெஸ்ட் மற்றும் ஒருநாள் அணிகளின் கேப்டனாக பதவி வகித்து வந்தார்.
இந்த நிலையில் தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான ஒருநாள் தொடர் முதல் இந்திய ஒருநாள் அணிக்கு ரோகித் சர்மா கேப்டனாக பொறுப்பேற்றார் என்று பிசிசிஐ அறிவித்துள்ளது. இதேபோல் டெஸ்ட் அணியின் துணை கேப்டன் பதவி அஜிங்யா ரஹானேவிடம் இருந்து பறிக்கப்பட்டு ரோகித் சர்மா நியமிக்கப்பட்டுள்ளார்.
இந்திய அணியின் கேப்டனாக 95 போட்டிகளில் செயல்பட்டுள்ள விராட் கோலி அதில் 65 போட்டிகளில் வெற்றியும், 27 போட்டிகளில் தோல்வியும், ஒரு போட்டியில் டிராவும் கண்டுள்ளார். இந்த பட்டியலில் தோனி 110 போட்டிகளில் வெற்றி பெற்று முதலிடத்தில் உள்ளார். ஆனால் தோனியை விட வெற்றி சதவிகதத்தில் விராட் கோலியே அதிகமாக உள்ளார்.
ஆனால் விராட் கோலி தலைமையில் இந்திய அணி எந்த ஒரு ஐ.சி.சி. கோப்பையையும் வெல்லவில்லை என்பது அவருக்கு பெரும் பின்னடைவாக கருதப்பட்டது. ஐ.பி.எல். தொடரிலும் அவரது தலைமையிலான அணி ஒரு கோப்பையையும் வெல்லவில்லை என்ற குற்றச்சாட்டும் எழுந்தது.
கடந்த 2 ஆண்டுகளுக்கு மேல் அவர் சர்வதேச போட்டிகளில் சதம் அடிக்காமல் இருந்து வந்தார். இதன் காரணமாக தான் அவருடைய கேப்டன் பொறுப்பு பறிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் தென்னாப்பிரிக்க மண்ணில் ஒருநாள் தொடரை வென்ற முதல் கேப்டன் என்ற பெருமையை விராட் கோலிக்கு மட்டுமே சொந்தமாகும்.
மேலும் 2023ஆம் ஆண்டு உலகக் கோப்பையை மனதில் வைத்தே ரோகித் சர்மாவுக்கு ஒருநாள் கேப்டன் பதவி வழங்கப்பட்டுள்ளது. மேலும் டி20 போட்டிக்கு ஒரு கேப்டன், ஒருநாள் போட்டிக்கு ஒரு கேப்டன் என்ற முறைக்கு பயிற்சியாளர் டிராவிட் எதிர்ப்பு தெரிவித்ததால் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. விராட் கோலியின் கேப்டன் பதவி பறிக்கப்பட்ட சம்பவம் அவரது ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.