ரொம்ப கஷ்டமா இருக்கு. தோல்விக்கு இவர்கள் தான் முக்கிய காரணம் - விராட் கோலி வேதனை
சென்னை அணிக்கு எதிரான போட்டியில் 20 ரன்கள் குறைவாக எடுத்ததே தோல்விக்கு முக்கிய காரணமாக அமைந்துவிட்டதாக விராட் கோலி வேதனை தெரிவித்துள்ளார்.
ஐபிஎல் டி.20 தொடரின் நேற்றைய போட்டியில் தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், விராட் கோலி தலைமையிலான பெங்களூர் அணியும் மோதின.
துபாய் ஷார்ஜா மைதானத்தில் நடைபெற்ற இந்த போட்டியில் டாஸ் வென்ற சென்னை அணியின் கேப்டன் தோனி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தார்.
இதனையடுத்து முதலில் பேட்டிங் செய்த பெங்களூர் அணிக்கு தேவ்தட் படிக்கல் 70 ரன்களும், விராட் கோலி 53 ரன்களும் எடுத்து சிறப்பான துவக்கம் கொடுத்தாலும், அடுத்தடுத்து களமிறங்கிய வீரர்களில் ஒருவர் கூட சொல்லிக்கொள்ளும் அளவிற்கு ரன் குவிக்காததால் 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்டுகளை இழந்த பெங்களூர் அணி 156 ரன்கள் எடுத்தது.
இதனையடுத்து 157 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற எட்டக்கூடிய இலக்கை துரத்தி களமிறங்கிய சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு ருத்துராஜ் கெய்க்வாட் 38 ரன்களும், டூபிளசிஸ் 31 ரன்களும் எடுத்து நல்ல துவக்கம் கொடுத்தனர்.
மிடில் ஆர்டரில் களமிறங்கிய மொய்ன் அலி 23 ரன்களும், அம்பத்தி ராயூடு 32 ரன்களும், இக்கட்டான கடைசி நேரத்தில் பொறுப்பாக விளையாடிய சுரேஷ் ரெய்னா 17 ரன்களும் எடுத்து கொடுத்ததன் மூலம் 18.1 ஓவரிலேயே இலக்கை எட்டிய சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் அசத்தல் வெற்றியும் பெற்றது.
இந்தநிலையில், சென்னை அணியுடனான இந்த தோல்வி குறித்து பேசிய பெங்களூர் அணியின் கேப்டன் விராட் கோலி, 20 ரன்கள் குறைவாக எடுத்ததே தோல்விக்கு காரணமாக அமைந்துவிட்டாதாக தெரிவித்துள்ளார்.
இது குறித்து விராட் கோலி பேசுகையில், ' முதலில் பேட்டிங் செய்த நாங்கள் 15 முதல் 20 ரன்கள் குறைவாக எடுத்துவிட்டோம்.
175 ரன்கள் எடுத்திருந்தால் போதும் அதுவே வெற்றிக்கு போதுமானதாக இருந்திருக்கும். பந்துவீச்சிலும் நாங்கள் அவ்வளவு சிறப்பாக செயல்படவில்லை. ஆனால் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி மிக சிறப்பாக பந்துவீசியது.
ஸ்லோ பந்துகளும், யார்கர் பந்துகளும் சரியாக வீசி அவர்களது திட்டத்தை சரியாக செயல்படுத்தினர். ஆனால் நாங்கள் அதை செய்ய தவறிவிட்டோம் அதே போல் முதல் 6 ஓவரில் ஒரு விக்கெட் கூட வீழ்த்த முடியாமல் போனதும் எங்களுக்கு பின்னடைவை கொடுத்துவிட்டது.
கொல்கத்தா அணிக்கு எதிரான முதல் போட்டியில் கூட நாங்கள் சரியாக விளையாடாததால் தோல்வியடைந்தோம், ஆனால் இந்த தோல்வி ஏமாற்றத்தை கொடுத்துள்ளது. தவறுகளை சரி செய்து கொள்வோம்' என்று தெரிவித்தார்.