டி20 வரலாற்றில் இதுவரை நிகழாத வகையில் புதிய சாதனை படைத்து அசத்திய விராட் கோலி - குவியும் பாராட்டு!
டி20 போட்டியில் தொடர்ந்து ஒரே அணிக்காக விளையாடி 7000 ரன்கள் குவித்த முதல் வீரர் என்ற சாதனையை படைத்துள்ளார் பெங்களூரு அணியின் நட்சத்திர வீரர் விராட் கோலி.
நேற்று மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட் செய்த குஜராத் அணி 20 ஓவர் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 168 ரன்கள் எடுத்தது. அந்த அணியில் அதிகப்பட்சமாக கேப்டன் ஹர்திக் பாண்ட்யா 62, டேவிட் மில்லர் 34 ரன்களும் எடுத்தனர்.
இதனையடுத்து, 169 ரன்கள் வெற்றி இலக்காக கொண்டு விளையாடிய பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணியில் கேப்டன் பாப் டூபிளெசிஸ் 44, விராட் கோலி 73, மேக்ஸ்வெல் 44 ரன்களும் விளாச 18.4 ஓவர்களில் 2 விக்கெட் இழப்புக்கு வெற்றி இலக்கை எட்டி 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இதனால் பெங்களூரு அணி பிளே ஆஃப் சுற்றில் தொடர்ந்து நீடித்து வருகிறது. நடப்பு சீசன் முழுவதும் பேட்டிங் செய்ய திணறிய கோலி இப்போட்டியில் சிறப்பாக ஆடி அசத்தினார். சொல்லப்போனால் ஆக்ரோஷமான பழைய விராட் கோலியாக மாறி ரசிகர்களை மகிழ்ச்சிக்குள்ளாக்கினார்.
நேற்றைய போட்டியில் 73 ரன்கள் விளாசிய நிலையில் டி20 போட்டியில் தொடர்ந்து ஒரே அணிக்காக விளையாடி 7000 ரன்கள் குவித்த முதல் வீரர் என்ற சாதனையை படைத்துள்ளார் கோலி. மேலும், சேஸிங்கில் 3000 ரன்களை கடந்த முதல் பேட்ஸ்மேன் என்ற கூடுதல் சாதனையையும் நிகழ்த்தியுள்ளார் விராட்.