அம்பயருடன் வாக்குவாதம் செய்த விராட் கோலி -தென்னாப்பிரிக்கா தொடரில் தொடரும் சர்ச்சைகள்
தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான 3வது டெஸ்டின் போது அம்பயரின் முடிவில் அதிருப்தியடைந்த விராட் கோலி வாக்குவாதத்தில் ஈடுபட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்தியா- தென்னாப்பிரிக்கா அணிகள் இடையே தொடர் யாருக்கு என்பதை நிர்ணயிக்கும் 3-வது மற்றும் கடைசி டெஸ்ட் கிரிக்கெட் போட்டி கேப்டவுனில் நேற்று முன்தினம் தொடங்கியது. இந்தப்போட்டியின் முதல் இன்னிங்ஸில் இந்தியா 223 ரன்களும், தென்னாப்பிரிக்கா 210 ரன்களும் எடுத்தன.
தொடர்ந்து 2வது இன்னிங்ஸை தொடங்கியுள்ள இந்திய அணி 2 ஆம் நாள் ஆட்டநேர முடிவில் 2 விக்கெட் இழப்புக்கு 57 ரன்கள் எடுத்துள்ளது. கேப்டன் விராட் கோலி 14 ரன்களும், புஜாரா 9 ரன்களுடன் களத்தில் உள்ளனர். இதனிடையே முதல் இன்னிங்ஸில் நிதானமாக ஆடி அரைசதம் கடந்த விராட் கோலி ஃபீல்டிங்கின் போது, தனது ஆக்ரோஷம் என்றுமே அடங்காது என்பது போல நடுவரிடம் தனது வேலையை காட்டினார்.
இந்தியாவின் பந்துவீச்சை பொறுத்தவரை ஜஸ்பிரித் பும்ரா விக்கெட்டுகளை கைப்பற்ற, மற்றொரு புறம் முகமது ஷமிக்கு ஆட்டத்தின் தொடக்கமே சிக்கலாக அமைந்தது. இன்று அவர் ஆரம்பத்தில் வீசிய அனைத்து பந்துகளிலும் தனது கால்களை ‘டேஞ்சர் சோன்' பகுதியில் வைத்துள்ளதாக குற்றச்சாட்டுக்கள் எழுந்தன. அதாவது, ஸ்டம்பிற்கு நேராக இருக்கும் மைய பகுதியை தான் டேஞ்சர் சோன் என்றழைப்பார்கள்.
இந்த தவறை பார்த்த கள நடுவர் எராஸ்மஸ் உடனடியாக முகமது ஷமியை அழைத்து எச்சரிக்கை விடுத்தார். 2 முறை இதே போன்று ஷமியை அழைத்து எச்சரிக்கை கொடுத்ததால் இந்திய அணி கேப்டன் விராட் கோலி அதிருப்தியடைந்தார். நேராக அம்பயரிடம் சென்று ஷமி என்ன தவறு செய்துவிட்டார் என்பது போல வாக்குவாதத்தில் ஈடுபட்டார். இந்த வீடியோ இணையத்தில் அதிகம் பரவி வருகிறது.
வழக்கம்போல் இந்த போட்டியும் இந்திய அணிக்கு சற்று பின்னடைவாக செல்கிறது. முதல் இன்னிங்ஸில் 223 ரன்களை அடித்த இந்திய அணி, தென்னாப்பிரிக்காவின் விக்கெட் டுகளை எடுப்பதில் சிரமப்பட்டு வருகிறது. அந்த அணி 45 ரன்களுக்கெல்லாம் 3 விக்கெட்டுகளை இழந்துவிட்ட நிலையில் பீட்டர்சன் மற்றும் ராஷீ வான் டர் டுசென் இணைந்து 50 ரன்களுக்கும் மேல் பார்ட்னர்ஷிப் வைத்தனர்.