”இயேசு நாதரைப் போல விராலிமலையை சுமந்தேன்” அமைச்சர் விஜயபாஸ்கர் உருக்கம்
இயேசு நாதர் சிலுவையை சுமந்தது போல் விராலிமலை தொகுதியை சுமந்தேன் என்று பிரச்சாரத்தில் அமைச்சர் விஜயபாஸ்கர் உருக்கமாக பேசியுள்ளார். தமிழகத்தில் ஏப்ரல் 6-ம் தேதி சட்டசபை தேர்தல் நடைபெற இருக்கிறது. தேர்தலில் பதிவாகும் வாக்குகள் மே 2-ம் தேதி எண்ணப்பட்டு அன்றே முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன.
தேர்தல் களத்தில் அ.தி.மு.க. கூட்டணி, தி.மு.க. கூட்டணி, டி.டி.வி.தினகரனின் அ.ம.மு.க. கூட்டணி, கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் கூட்டணி, நாம் தமிழர் கட்சி, சுயேச்சை வேட்பாளர்கள் என்று அனைத்து கட்சிகளும் பிரச்சாரத்தில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றது. இந்நிலையில், புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலைக்கு உட்பட்ட இலூப்பூர் பகுதியில் அமைச்சர் விஜயபாஸ்கர் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டார்.

அப்போது அந்த பிரச்சாரத்தில் அவர் பேசுகையில், இயேசு நாதர் சிலுவையை சுமந்தது போல் விராலிமலை தொகுதியை சுமந்தேன். கடந்த 10 ஆண்டுகளாக விராலிமலை தொகுதிக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகளை செய்து வந்திருக்கிறேன். கொரோனா காலத்தில் 24 மணி நேரமும் பணியாற்றியதால் எனது உடல் எடை 7.5 கிலோ வரை குறைந்தது.
எனக்கும் உடலில் குறைபாடு இருக்கிறது. ஆனாலும், நான் எடுத்துகொண்ட பொறுப்பை சரியாக செய்ய வேண்டும் என்ற வெறி மனதில் இருக்கிறது.
எனக்கு 24 மணி நேரமும் உழைக்க தெரியும், கஷ்டபட தெரியும், நல்ல பல திட்டங்களை கொண்டு வந்து சேர்க்க தெரியும். எனது கடைசி சொட்டு ரத்தம் இருக்கும் வரை இந்த தொகுதிக்கு உழைத்துக்கொண்டேதான் நான் இருப்பேன் என்று உருக்கமாக பேசினார்.