நாங்க என்ன திருடர்களா? ஏன் இப்படி செய்றீங்க? - பேருந்திலிருந்து இறக்கிவிடப்பட்ட மீனவ மூதாட்டி - வலுக்கும் கண்டனங்கள்
செங்கல்பட்டு மாவட்டம், திருக்கழுக்குன்றம், கொகிலமேடு கிராமத்தைச் சேர்ந்தவர் செல்லம்மாள் (52). இவர் நேற்று காலை மீன் வியாபாரத்திற்காக மீன் கூடையை எடுத்துக்கொண்டு மகாபலிபுரம் பேருந்து நிலையத்தில் மகாபலிபுரத்திலிருந்து தாம்பரம் வரை செல்லக்கூடிய (TN-01-AN -1842) பேருந்தில் ஏறி இருக்கிறார்.
அப்போது, நடத்துனர் அவர்களை மீன் கூடையை ஏற்றிக்கொண்டு பேருந்தில் ஏறக்கூடாது என்று கூறி அப்பெண்மணியை வலுக்கட்டாயமாக கூறி பேருந்திலிருந்து இறக்கி விட்டுள்ளார்.
பேருந்திலிருந்து இறக்கி விடப்பட்ட பெண்மணி தன்னுடைய மனக்குமுறல்களை வெளிப்படுத்தினார்.
இது குறித்து அவர் பேசியதாவது -
நாங்கள் திருடர்கள் கிடையாதே... நாங்கள் பயணச் சீட்டுக்கு பணம் செலுத்த மாட்டோம் என்று கூறவில்லையே... மாநகரப் பேருந்து ஏழைகளுக்கானது கிடையாதா? வசதி படைத்தவர்கள் தான் செல்ல வேண்டும் என்றால் அப்பேருந்து ஏன் எங்கள் கிராமத்திற்கு வரவேண்டும்.
வசதிபடைத்தவர்கள் பிரயாணம் செய்யும்போது அவர்கள் லக்கேஜ் ஏற்றுவது இல்லையா? நாங்கள் பணம் செலுத்தத் தயாராக இருக்கும்போது நடத்துனர்கள் ஏன் எங்களை கீழ்தரமாக பார்க்கின்றனர் என்று மனக்குமுறலை வெளிப்படுத்தியுள்ளார்.
இது தொடர்பான வீடியோ சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இது தொடர்பாக போக்குவரத்து துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்களும், சமூக ஆர்வலர்களும் கோரிக்கை வைத்துள்ளனர்.
இதேபோன்று, செங்கல்பட்டு அருகே மீனவப் பெண் மூதாட்டி ஒருவர் மீன் கூடையை பேருந்தில் ஏற்றியதற்காக அரசு நடத்துனரால் இறக்கி விடப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது குறிப்பிடத்தக்கது.