“மதம் என்னும் மதம் ஓயட்டும்..தேசம் மலர் மீது துயில் கொள்ளட்டும்” - வைரல் சிறுவன் அப்துல் கலாமின் நெகிழ்ச்சி பேட்டி
“என்ன எல்லாரும் பல்லன்’னு தான் கூப்டுவாங்க..ஆனா எனக்கு எல்லாருமே புடிக்கும், எல்லாரும் நண்பர்கள் மாறி தான்” என சிறுவன் ஒருவன் பேசிய வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
சென்னையை அடுத்த கண்ணகி நகர் பகுதியை சேர்ந்த சிறுவன் அப்துல் கலாம்.
7-ம் வகுப்பு படிக்கும் அப்துல் அண்மையில் தனியார் யூடியூப் சேனல் ஒன்றிற்கு அளித்த பேட்டியில் பேசிய பதிவால் இன்று தமிழகம் முழுவதும் புகழப்படும் மினி செலிபிரிட்டியாக மாறியுள்ளான்.
‘உன் வாழ்வில் உனக்கு பிடிக்காத நபர் என்றால் அது யார்’ என்ற கேள்வியை சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை ‘பொதுமக்கள் கருத்து’ என்ற தொகுப்பில் கேட்கப்பட்டது.
இந்த கேள்விக்கு பதில் அளித்த பெரும்பாலான மக்கள் தங்கள் வாழ்வில் பிடிக்காத நபர்களை பற்றி பேசினர்.
அப்போது அங்கு வந்த 7-ம் வகுப்பு படிக்கும் சிறுவன் அப்துல் அனைவரும் வியக்கும் வகையில் பதிலளித்து காண்போரை மெய்சிலிர்க்க வைத்துள்ளான்.
அப்படி என்ன பதில் கூறினான் அவன்?..‘யாரையும் புடிக்காதுன்னு சொல்லாதிங்க, என்னையும் எல்லாரும் பல்லன்’னு தான் கூப்டுவாங்க. நான் ஏன் எல்லாரையும் புடிக்காதுன்னு சொல்லனும்?
எல்லாரும் நண்பர்கள் மாறி தான். ஒற்றுமை இல்லாத நாடு எதுக்கு இருக்கனும், நம்ம நாடு ஒற்றுமையான நாடுனு சொல்றோம், ஒற்றுமை இல்லாம இருந்தா எப்படி? என கேள்வி எழுப்பியவரிடமே பதில் கேள்வி எழுப்பி வியப்பில் ஆழ்த்தினான்.
சிறுவன் பேசிய இந்த வீடியோ அனைவரது வாட்ஸ் அப் ஸ்டேட்டஸ்களிலும் இடம் பிடித்து பாராட்டுக்களை பெற்றது.
இந்த சம்பவத்தை தொடர்ந்து அவனை ஐபிசி தமிழ் யூடியூப் சேனல் நேரில் சென்று நேர்காணல் செய்தது.
அப்போது பல்வேறு கேள்விகளுக்கு சிறுவன் அப்துல் நேர்மறை பார்வையுடனும் தெளிவுடனும் பதிலளித்தும், பாட்டு பாடியும் தன் நண்பர்களை அறிமுகம் செய்து வைத்தும் பேசினான்.
அப்படி ஒரு கேள்வியாக அண்மையில் இந்திய அளவில் சர்ச்சையை கிளப்பிய ஹிஜாப் பிரச்சினையை குறித்து கேட்டப்போது,
“சாதி மத கலவரம் நமக்கு தேவ இல்ல, நம்ம எல்லாரும் இந்தியர், எல்லாரும் ஒரே மாறி தான். உங்களுக்கு இருக்குற இரத்த கலரு தான் எங்களுக்கும் இருக்குது, எல்லாருக்கும் சிவப்பு கலரு தான்.
நம்ம முன்னோர்கள் சாதி மதம்லாம் நமக்கு சொல்லி குடுத்துட்டாங்க. அதான் நம்ம இப்ப வரைக்கும் சாதி மதம்னு சொல்லிட்டு இருக்கோம்” என அத்தனை தெளிவுடன் பேசி ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளான்.
சிறுவனின் இத்தகைய தெளிவுவாய்ந்த கருத்துக்கள் குறித்து அவனின் பெற்றோர்களிடம் கேட்டப்போது அது அவனின் ஜீன்(மரபணு)-இல் இருக்கிறது என பெருமையாக தெரிவித்தனர்.
இது குறித்து அப்துல் கூறுகையில், இது என் அம்மா அப்பா ஆசிரியர்கள் அனைவரும் எனக்கு கற்றுக்கொடுத்தது. அதன் வெளிபாடே நான் பேசியது என தெரிவித்தான்.
சிறுவனின் இந்த கருத்துக்கள் மக்கள் மத்தியில் பாராட்டுக்களை பெற்று வருகிறது.