“சுரேஷ் ரெய்னா இடம்பெறாதது சென்னைக்கு ஈடுசெய்ய முடியாத இழப்பு” - முன்னாள் இந்திய வீரர் வேதனை
இந்திய அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் சுரெஷ் ரெய்னா இம்முறை ஐபிஎல் போட்டியில் இடம்பெறாதது குறித்து முன்னாள் இந்திய இடது கை அதிரடி வீரர் வினோத் காம்ப்ளி வேதனை தெரிவித்துள்ளார்.
நடப்பாண்டு ஐபிஎல் தொடருக்காக லக்னோ, குஜராத் ஆகிய அணிகள் சேர்க்கப்பட்டுள்ள நிலையில் 10 அணிகளுக்கான வீரர்களின் மெகா ஏலம் பிப்ரவரி 12, 13 ஆகிய தேதிகளில் பெங்களூருவில் விறுவிறுப்பாக நடந்து முடிந்தது.
இதில் ஒவ்வொரு அணியும் தங்களுக்கு கொடுக்கப்பட்டிருந்த தொகைக்குள் தங்களுக்கு தேவையான வீரர்களை தேர்ந்தெடுத்தனர்.
குறிப்பாக சென்னை அணி கடைசி நேரத்தில் பல வீரர்களை அவர்களின் அடிப்படை தொகைக்கே ஏலத்தில் எடுத்தது. ஆனால் சுரேஷ் ரெய்னா மற்றும் டூ பிளெஸ்சியை ஏலத்தில் எடுக்காமல் விட்டது ரசிகர்கள் மத்தியில் பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியது.
இவர்களில் டூ பிளெஸ்சியை பெங்களூரு அணி ஏலத்தில் எடுக்க கடைசி வரை ரெய்னா விலை போகவில்லை. சென்னை அணியின் வரலாற்றில் மிக முக்கிய வீரரான ரெய்னாவுக்கு இப்படி ஒரு நிலைமையா என ரசிகர்கள் வேதனை அடைந்தனர்.
இந்நிலையில் ரெய்னாவை ஏன் ஏலம் எடுக்க முடியவில்லை என்று சிஎஸ்கே தலைமைச் செயல் அதிகாரி கொடுத்த விளக்கத்தில்,
“ரெய்னா கடந்த 12 ஆண்டுகளாக சிஎஸ்கே அணிக்காக மிகவும் நிலையான ஆட்டக்காரர்களில் ஒருவர். நிச்சயமாக, ரெய்னா இல்லாதது எங்களுக்கு மிகவும் கடினமாக இருந்தது.
ஆனால் அதே நேரத்தில், எந்த அணியும் எந்த அணியை வைத்திருக்க விரும்புகிறதோ அந்த அணியின் வடிவம் மற்றும் என்ன மாதிரியான அணி தேவை என்ற வகையைப் பொறுத்தது என்பதை நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும்.
அவர் இந்த அணிக்கு பொருந்தமாட்டார் என்று நாங்கள் நினைத்தோம்," என்று அவர் கூறினார்.
இந்நிலையில் இது குறித்து சச்சின் டெண்டுல்கருடன் பால்யகாலம் முதலாக நண்பராக இருக்கும் முன்னாள் இந்திய இடது கை அதிரடி வீரர் வினோத் காம்ப்ளி,
“சென்னை அணிக்காக விளையாடி அபாரமான ஸ்கோரராக இருந்த சுரேஷ் ரெய்னா சின்னதால ஐபிஎல்லில் விற்கப்படாமல் போய்விட்டார்.
அவரை லீக்கில் இழப்போம், அவர் ஒரு நல்ல பிரியாவிடை பெற தகுதியானவர்.
தோனி மற்றும் ரெய்னா இடையேயான நட்புறவை ஐபிஎல் நிச்சயமாக இழக்கும். சிறந்த நட்புகள் அப்படியே இருக்க வேண்டும். தல, சின்னத்தல இழப்பு சென்னைக்கு ஈடுசெய்ய முடியாதவை.”என்றார்.