சக மாணவர்களை துடைப்பத்தால் தாக்கிய மாணவர் - வீடியோ வைரலானதால் பொதுமக்கள் அதிர்ச்சி
திண்டிவனம் அருகே அரசு பள்ளி வகுப்பறைக்குள் சக மாணவர்களை துடைப்பத்தால் மாணவர் ஒருவர் விரட்டி, விரட்டி தாக்கும் வீடியோ காட்சிகள் இணையத்தில் வைரலாகியுள்ளது.
விழுப்புரம் மாவட்டத்தில் பல்வேறு இடங்களிலும் சமீப காலமாக அரசு பள்ளிகளில் படித்து வரும் மாணவ, மாணவிகளின் ஒழுங்கீன செயல்கள் அதிகரித்து வருகிறது. கடந்த சில நாட்களுக்கு முன்பு பள்ளிகள் முடிந்து வீடு திரும்பும் மாணவர்கள் அரசு பேருந்துகளில் படிகளில் தொங்கியபடியும், மேலே அமர்ந்தும் ஆபத்தான பயணம் மேற்கொண்டனர்.
இதனைத் தொடர்ந்து விழுப்புரம் அரசுப் பள்ளியில் பயிலும் மாணவி ஒருவர் சில தினங்களுக்கு முன்பு விழுப்புரம் காந்தி சிலை அருகே நடுரோட்டில் குத்தாட்டம் போட்ட சம்பவம் பலரையும் அதிர்ச்சி அடைய வைத்தது. அந்த வகையில் அரசு பள்ளி ஒன்றில் சக மாணவர்களை துடைப்பத்தால் விரட்டி, விரட்டி மாணவர் ஒருவர் வகுப்பறைக்குள் வைத்து தாக்கும் வீடியோ காட்சிகள் வெளியாகி அதிர்ச்சியாக்கியுள்ளது.
விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அருகே உள்ள வேப்பேரி அரசு மேல்நிலைப் பள்ளியில்தான் இந்த சம்பவம் நடந்ததாக கூறப்படுகிறது. இங்கு 11ம் வகுப்பு படிக்கும் மாணவர் ஒருவர் சக மாணவர்களை துடைப்பத்தால் விரட்டி, விரட்டி தாக்கியுள்ளார். இதனை மற்றொரு மாணவர் வீடியோ எடுத்து பகிர அது சமூக வலைதளங்களில் வெளியாகி சர்ச்சைகளை கிளப்பியுள்ளது.
இதனிடையே இந்த சம்பவம் தொடர்பாக பள்ளியின் தலைமை ஆசிரியர் தலைமையில் குழு அமைத்து விசாரனை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று மாவட்ட கல்வி அலுவலர் கிருஷ்ணபிரியா தெரிவித்துள்ளார்.