மாணவியின் உடலுக்கு அஞ்சலி செலுத்த குவியும் ஊர் பொதுமக்கள்
மாணவியின் உடலுக்கு அஞ்சலி செலுத்த ஊர் பொதுமக்கள் குவிந்து வருகின்றனர். கடந்த 13-ந்தேதி விடுதியில் இருந்த மாணவி ஸ்ரீமதி மர்மமான முறையில் உயிரிழந்தார்.
கள்ளக்குறிச்சி கலவரம்
பள்ளி நிர்வாக தரப்பில் ஸ்ரீமதி 3-வது மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டதாக தெரிவித்தனர். ஆனால் இதை அவரது பெற்றோர் ஏற்கவில்லை, சாவில் சந்தேகம் இருப்பதாக கூறி போராட்டத்தை முன்னெடுத்து வந்தனர்.
இதில் கடந்த 17-ந்தேதி பல்வேறு அமைப்பினர் நடத்திய போராட்டம், பெரிய கலவரத்தில் முடிந்தது. மாணவி மரணம் தொடர்பாக சி.பி.சி.ஐ.டி. போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதற்கிடையில், மாணவி ஸ்ரீமதியின் மரணத்தில் மர்ம இருப்பதாக கூறி அவரது உடலை வாங்க பெற்றோர் மறுப்பு தெரிவித்து வந்தனர்.
கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்தும் மக்கள்
இதனால் கடந்த 10 நாட்களாக ஸ்ரீமதியின் உடல் கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டிருந்தது. அவர்களது பெற்றோர் சென்னை உயர்நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கில் மறு பிரேத பரிசோதனை செய்ய நீதிபதி உத்தரவிட்டார்.

பின்னர் உடலை பெற்றோர் பெற்றுக்கொள்ளவும் நீதிபதி உத்தரவிட்டார்.
இந்த நிலையில் உடலை அவர்களது பெற்றோர் இன்று காலை பெற்றுக்கொண்ட நிலையில் அவரது சொந்த ஊரான பெரியநெசலுார் கிராமத்தில் வைக்கப்பட்டுள்ளது.
அவரின் உடலுக்கு பொதுமக்கள் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.