விளாத்திகுளம் அருகே உள்ள குளத்தில் முதலைகள் அட்டூழியம் - மக்கள் பீதி
தூத்துக்குடி மாவட்டம், விளாத்திகுளம் அருகே உள்ள வேடபட்டி கிராமத்தைச் சேர்ந்த பாலகிருஷ்ணன் என்பவர் ஆடுமாடுகள் வைத்து விவசாயம் செய்து வருகிறார்.
இவர் கடந்த சில தினங்களுக்கு முன்பு ஊரின் அருகே உள்ள குளத்திற்குச் சென்று தனது மாடுகளை குளிப்பாட்டி உள்ளார். அப்போது மாடு அலறியடித்துக்கொண்டு கரைக்கு ஓடிவந்துள்ளது.
கரைக்கு வந்து மாட்டைப் பார்த்த உரிமையாளர் வலது காலில் பலத்த காயம் ஏற்பட்டு ரத்தம் வருவதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
இதனையடுத்து குளத்தில் முதலை இருக்கலாம், அதற்கான அறிகுறி இருப்பதாகவும் கூறப்பட்டு வந்த நிலையில், இச்செய்தி காட்டு தீ போல் பரவியதையடுத்து கிராம மக்கள் சார்பில் போஸ்டர் அடித்து அப்பகுதிக்கு யாரும் செல்லாதவாறு குளத்தின் அருகே ஒட்டியுள்ளனர்.
இது சம்பந்தமாக தீயணைப்புத்துறை வனத்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. குளத்தின் நீர் வற்றிய பின்பு முதலை இருப்பது குறித்து ஆய்வு செய்யலாம் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.