அடுத்த பிளான் போடும் வி.கே.சசிகலா..விஜயசாந்தியுட்ன் ரகசிய சந்திப்பு - தனியறையில் பேசியது என்ன?
ஜெயலலிதாவின் தோழி சசிகலா தனது சிறை வாசத்திற்கு பிறகு சற்று அமைதியாக இருந்த நிலையில் தற்போது மீண்டும் அரசியல் பயணத்தை தொடர்ந்துள்ளார்.
கடந்த சில நாட்களுக்கு முன்பு செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி ஒன்றில் அ.தி.மு.க. தலைவர்கள் தற்போதும் தன்னுடன் நெருங்கிய தொடர்பில் இருப்பதாகவும், சிலர் மட்டுமே தன்னை எதிர்க்கிறார்கள் என்றும் சசிகலா கூறி இருந்தார்.
மேலும் அ.தி.மு.க.வுக்கு தான் நிச்சயம் தலைமை தாங்குவேன். அதற்கான நம்பிக்கை 100 சதவீதம் உள்ளது என்றும் தெரிவித்து இருந்தார். இந்த நிலையில் சசிகலாவை பா.ஜனதா முன்னாள் எம்.பி.யான விஜயசாந்தி சமீபத்தில் ரகசியமாக சந்தித்துள்ளார்.
சசிகலா சிறையில் இருந்து வெளிவந்த நேரத்தில் தி.நகரில் உள்ள இல்லத்தில் வெளிப்படையாக சந்தித்த விஜயசாந்தி கடந்த சில நாட்களுக்கு முன்பு மீண்டும் ரகசியமாக சந்தித்துள்ளார். இந்த சந்திப்பின்போது சசிகலாவின் வருங்கால அரசியல் பயணம் குறித்து இருவரும் விரிவாக ஆலோசனை நடத்தியதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
ஜெயலலிதா மரணத்துக்கு பிறகு அ.தி.மு.க.வின் செயல்பாடுகளை பாரதிய ஜனதா கட்சி கட்டுப்படுத்தி வருவதாக கூறப்பட்டு வருகிறது. கடந்த சட்டமன்ற தேர்தலின்போதே அ.தி.மு.க.வில் இருந்து பிரிந்து சென்றவர்களை ஒன்றிணைக்கும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன ஆனால் அதற்கான பலன் கிடைக்கவில்லை.
இந்த பரபரப்பான சூழ்நிலையில் 2024-ம் ஆண்டு நடைபெறஉள்ள பாராளுமன்ற தேர்தலில் அ.தி.மு.க.வில் இருந்து விலகி உள்ளவர்களை மீண்டும் ஒன்றிணைக்கும் முயற்சியாகவே விஜயசாந்தி சசிகலாவை சந்தித்து இருப்பதாக அரசியல் விமர்சகர்கள் தெரிவிக்கின்றனர்.