நான் தோல்வியை ஒத்துக் கொள்கிறேன்.. சீமான் மீதான புகாரை வாபஸ் பெற்றார் நடிகை விஜயலட்சுமி!
சீமான் மீது கொடுக்கப்பட்ட புகாரை நேற்று நள்ளிரவில் வாபஸ் வாங்கியுள்ளார் நடிகை விஜயலட்சுமி.
சீமான் மீது புகார்
திரைப்பட நடிகை விஜயலட்சுமி கடந்த ஆகஸ்ட் 28ம் தேதி சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது புகார் அளித்தார். அதில் "மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் சீமான் என்னைத் திருமணம் செய்துகொண்டார்.
நாங்கள் கணவன், மனைவியாக வாழ்ந்தோம். நான் 7 முறை கர்ப்பமானேன். ஆனால்,என்னுடைய அனுமதியின்றி, மாத்திரை மூலம் கருக்கலைப்பு செய்தார். தற்போது சீமான் மற்றும் கட்சியைச் சேர்ந்த மதுரை செல்வம் என்பவர் என்னை மிரட்டுகிறார். எனவே, இருவர் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என தெரிவித்திருந்தார். இந்த விவகாரம் தமிழக அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியிருந்த நிலையில், போலீசார் விசாரணை நடத்தி வந்தனர்.
மேலும், திருவள்ளூர் நீதிபதி முன்னிலையில் விஜயலட்சுமியின் வாக்குமூலம் அளித்தார். இதையடுத்து வளசரவாக்கம் போலீசார் சீமான் நேரில் ஆஜராகுமாறு சம்மன் அனுப்பினர். ஆனால், கடந்த 12ம் தேதி சீமான் ஆஜராகாமல், அவரது வழக்கறிஞர் நேரில் ஆஜராகி விளக்கம் அளித்தார். இதனைத் தொடர்ந்து சீமானின் வீட்டிற்கே சென்று நேரில் ஆஜராகுமாறு 2வது முறையாக சம்மன் வழங்கப்பட்டது.
வாபஸ்
இந்நிலையில் சென்னை வளசரவாக்கம் காவல்நிலையத்தில் சீமான் மீது கொடுக்கப்பட்ட புகாரை நேற்று நள்ளிரவில் வாபஸ் வாங்கியுள்ளார் நடிகை விஜயலட்சுமி. இதனையடுத்து செய்தியாளர்களை சந்தித்த அவர் "வழக்கை வாபஸ் பெற யாரும் கட்டாயப்படுத்தவில்லை. புகார் மீதான நடவடிக்கையில் எந்த முன்னேற்றமும் இல்லை.
காவல்துறை நடவடிக்கை எடுக்கவில்லை. என்னால் தனி ஒருவராக போராட முடியவில்லை. சீமானை எதிர்கொள்ள எனக்கு போதிய ஆதரவு யாரிடமும் கிடைக்கவில்லை. வீரலட்சுமி தன்னை தவறாக வழிநடத்துகிறார் என்பதை அறிந்து கொண்டேன் இதன் காரணமாகத்தான் நான் கண்டித்தும் வீடியோ ஒன்றை வெளியிட்டும் இருந்தேன்.
தமிழ்நாட்டில் சீமானுக்கு மட்டுமே அதிகாரம் உள்ளது. அவரை யாரும் எதுவும் செய்ய முடியாது நான் தோல்வியை ஒத்துக் கொள்கிறேன் " என்று நடிகை விஜயலட்சுமி தெரிவித்துள்ளார்.