தேமுதிக தலைவர் விஜயகாந்த் நீண்ட நாட்களுக்குப் பிறகு பொது நிகழ்ச்சியில் பங்கேற்றார்
தமிழக சட்டமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில் அரசியல் கட்சிகள் தேர்தல் பிரச்சாரம், கூட்டணி பேச்சுவார்த்தை எனத் தீவிரமாக இறங்கியுள்ளன. சட்டமன்ற தேர்தல் தேதி இந்த மாத இறுதியில் அறிவிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. அதற்குப் பிறகு தேர்தல் களம் சூடுபிடித்து விடும். இதற்காக அரசியல் கட்சிகள் தற்போதிலிருந்தே தயாராகி வருகின்றன.
பாஜக, பாமக உள்ளிட்டவற்றுடன் கூட்டணிக்கு பேசி வரும் அதிமுக, தேமுதிகவை கண்டுகொள்ளாதது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தேமுதிக தனித்து போட்டியிடக்கூடத் தயார் என அக்கட்சியின் பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் இன்று அக்கட்சியின் கொடிநாள் கொண்டாடப்பட்ட நிலையில் விஜயகாந்த் இன்று கட்சி அலுவலகத்துக்கு திறந்த வேனில் வந்து கொடியேற்றினார்.
அப்போது பேசிய அவர் என் தொண்டர்களையும், என் மக்களையும் சந்திக்க விரைவில் வரப்போகிறேன் எனக் கூறினார். நீண்ட நாட்களுக்குப் பிறகு விஜயகாந்தின் இந்த பேச்சு தேமுதிக தொண்டர்கள் மத்தியில் உத்வேகத்தை ஏற்படுத்தியுள்ளது.