விஜயபாஸ்கர் வீட்டில் ரெய்டு..திமுக கோரத்தாண்டவம் ஆடுகிறது - அதிமுக கண்டனம்
முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கருக்குத் தொடர்புடைய இடங்களில் நடைபெறும் ரெய்டுக்கு அதிமுக கண்டனம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ், இணை ஒருங்கிணைப்பாளர் ஈபிஎஸ் ஆகிய இருவரும் கூட்டாக அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளனர்.
அதில், ''அலைகடல் ஓய்வதுமில்லை; அதிமுக சாய்வதுமில்லை! அதிமுக அமைப்புச் செயலாளரும், புதுக்கோட்டை வடக்கு மாவட்டச் செயலாளரும், முன்னாள் அமைச்சருமான விஜயபாஸ்கர் எம்எல்ஏவுக்குத் தொடர்புடைய இடங்களிலும்,
அவரது உறவினர்கள் வாழும் வீடுகளிலும் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை என்ற பெயரில் திமுக அரசு, தனது பழிவாங்கும் உணர்ச்சிகளை மீண்டும் பகிரங்கப்படுத்தி, வக்கிர நடவடிக்கைகள் மூலம் தற்காலிக மகிழ்ச்சியைத் தேடி இருப்பது கண்டனத்திற்குரியது.
அதிமுக பொன்விழா கொண்டாடி வரும் எழுச்சிமிகு தருணத்தில், நேற்று (17.10.2021) தலைநகர் சென்னையிலும்,
மாநிலத்தின் மற்ற பகுதிகளிலும் நடைபெற்ற உற்சாகமான விழாக்களைக் கண்டு மனம் பொறுக்க முடியாத திமுக, விடிந்தவுடன் காவல்துறையை ஏவிவிட்டு, லஞ்ச ஒழிப்பு என்ற பெயரில் கோரத் தாண்டவம் ஆடிக் கொண்டிருக்கிறது.
அதிமுக ஆழம் காண முடியாத அலைகடலுக்கு ஒப்பான பேரியக்கம்; இந்த இயக்கம் திமுகவின் முயற்சிகளால் முடங்கிடவோ, முடியாமல் போகவோ, ஓய்ந்து, சாயப்போவதோ இல்லை.
எத்தனை அதிமுக நிர்வாகிகள் மீது என்னென்ன வழக்குகள் போட்டாலும், அவதூறு பரப்பினாலும், அதிமுக எதிர்காலத்தில் அடையப்போகும் வெற்றிகளை யாராலும் தடுத்து நிறுத்திவிட முடியாது''.என அறிக்கையில் தெரிவித்துள்ளனர்.