விஜய்யின் முன்னாள் மேனேஜருக்கு முக்கிய பதவி கொடுத்த திமுக
திமுகவில் இணைந்த விஜய்யின் முன்னாள் மேனேஜர் பி.டி.செல்வகுமாருக்கு முக்கிய பதவி வழங்கப்பட்டுள்ளது.
பி.டி.செல்வகுமார்
விஜய்யின் மேலாளராக சுமார் 27 ஆண்டுகள் பணியாற்றியவர் பி.டி.செல்வகுமார். இவர் விஜய் நடித்த புலி திரைப்படத்தை தயாரித்துள்ளார்.

மேலும், வசீகரா, போக்கிரி, ஆதி, வேட்டைக்காரன், கஜினி, ஆழ்வார் உள்ளிட்ட பல படங்களுக்கு PRO ஆக பணியாற்றியுள்ளார்.
விஜய்யிடமிருந்து விலகிய அவர் கலப்பை மக்கள் இயக்கத்தை தொடங்கி நடத்தி வந்தார்.
இந்நிலையில், கடந்த டிசம்பர் 11ஆம் தேதி நூற்றுக்கும் மேற்பட்ட தன்னுடைய ஆதரவாளர்களுடன் சென்னை அண்ணா அறிவாலயத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணைந்து, விஜய்க்கு அதிர்ச்சி அளித்தார்.

முதல்வர் மு.க.ஸ்டாலின் தமிழ்நாட்டை சிறப்பாக ஆட்சி செய்வதாக கூறிய அவர் விஜய் மீது கடுமையான விமர்சனங்களை முன்வைத்தார்.
விஜய் குறித்து பேசிய அவர், விஜய் ஒரு நடிகராக சிறப்பாக செயல்பட்டதால் அவருடன் சினிமாவில் பயணித்தேன். ஆனால் அரசியல் என்பது வேறு. விஜய்யை பார்க்க கூட்டம் வரும். ஆனால் அவருக்கு வாக்களிப்பார்கள் என்று நினைக்க கூடாது.

ரசிகர் மன்றத்தில் உழைத்தவர்களுக்கு பொறுப்பு கொடுப்பேன் என்றார். ஆனால் இன்று அவருடன் இருப்பவர்கள் ரசிகர் மன்றத்தை சேர்ந்தவர்கள் அல்ல" என கூறினார்.
திமுகவில் இணைந்த அவருக்கு தற்போது வர்த்தகர் அணி துணைச் செயலாளர் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது. கட்சியில் இணைந்த 2 மாதங்களிலே அவருக்கு பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது.
விஜய் தொடர்ந்து திமுகவை விமர்சித்து வரும் நிலையில், விஜய் உடன் நீண்ட காலம் நெருங்கி பயணித்த பி.டி.செல்வகுமாரை வைத்து பதிலடி கொடுக்க திமுக திட்டமிட்டுள்ளது.