விஜய் தேவரகொண்டா, சமந்தாவுக்கு விபத்தெல்லாம் நடக்கலை... வதந்தியை நம்ப வேண்டாம் - படக்குழு அறிவிப்பு
தமிழ், தெலுங்கில் முன்னணி நடிகையாக வலம் வரும் சமந்தா, தற்போது விஜய் நிர்வாணா இயக்கத்தில் நடிகர் விஜய் தேவரகொண்டா ஜோடியாக குஷி என்ற புதிய படத்தில் நடித்து வருகிறார்.
வருகிற டிசம்பர் மாதம் 23-ந் தேதி இப்படம் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ரசிகர்கள் பெருமளவில் எதிர்பார்த்து காத்திருக்கும் இப்படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு வட இந்திய பகுதியான காஷ்மீரில் நடைபெற்றது.
இதில் நடிகை சமந்தா மற்றும் விஜய் தேவரகொண்டா இருவரும் பங்கேற்று நடித்த நிலையில், படப்பிடிப்பின் போது நடிகை சமந்தாவும், நடிகர் விஜய் தேவரகொண்டாவும் விபத்தில் சிக்கியதாக திடுக்கிடும் தகவல் வெளியாகியுள்ளது.
காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் ஆக்ஷன் காட்சியை படமாக்கியபோது அங்குள்ள ஆற்றின் குறுக்கே இருவரும் பைக்கில் கடந்து செல்வது போன்ற காட்சியை படம் பிடித்துள்ளனர்.
அப்போது எதிர்பாராத விதமாக பைக்கில் இருந்து இருவரும் தவறி விழுந்து நீரில் மூழ்கினர். இதனையடுத்து, அவர்களை உடனடியாக மீட்டு ஓய்வு எடுப்பதற்காக விடுதிக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். அங்கு அவர்களுக்கு ஃபிசியோதெரபி அளிக்கப்பட்டது.இதனால், குஷி படக்குழு பதறிப்போயுள்ளது என்று செய்திகள் வெளியாகி ரசிகர்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஆனால், இச்செய்திக்கு “இந்தச் செய்தியில் உண்மை இல்லை. காஷ்மீரில் 30 நாட்கள் படப்பிடிப்பை வெற்றிகரமாக முடித்துவிட்டு நேற்று ஒட்டுமொத்த படக்குழுவும் ஹைதராபாத் திரும்பினர். 2வது ஷெட்யூல் விரைவில் தொடங்கவுள்ளது. தயவு செய்து வதந்திகளை நம்ப வேண்டாம்” என்று படக்குழு ஒரு செய்திக்குறிப்பை வெளியிட்டுள்ளது.