விஜய் முதலமைச்சராகனும் - அலகு குத்தி 3 கி.மீ. நடந்து சென்று வழிபட்ட தவெக தொண்டர்
தவெக தொண்டர் ஒருவர் மேற்கொண்ட நேர்த்திக்கடன் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தவெக தொண்டர்
திருநெல்வேலி, இந்திரா நகர் பகுதியைச் சேர்ந்தவர் இசக்கியப்பன் (48). தவெக கிளைக் கழக செயலாளராக பொறுப்பு வகித்து வருகிறார்.

இந்நிலையில், 2026 சட்டமன்றத் தேர்தலில் விஜய் தமிழக முதலமைச்சராக வேண்டும் எனவும், கட்சி பொதுக்கூட்டங்களில் அசம்பாவிதங்கள் நடக்கக்கூடாது என்பதற்காகவும் முத்தாரம்மனுக்கு கார்த்திகை மாத வழிபாட்டை மேற்கொண்டுள்ளார்.
அதன்படி, 3 கிலோ எடையும், 12 அடி நீளமும் கொண்ட சூலாயுதவேல் அலகை வாயில் குத்திக்கொண்டு, செட்டிக்குளம் கடற்கரையில் இருந்து முத்தாரம்மன் கோயிலுக்கு சுமார் 3 கிலோமீட்டர் நடந்து வந்து நேர்த்திக்கடன் செலுத்தினார்.
நேர்த்திக்கடன்
அவருடன் மற்ற பக்தர்கள் பால்குடம் ஏந்தியபடி வந்தனர். இதில், விஜய் நடித்த சினிமா பாடல்களையும், கட்சி கொள்கை பாடலையும் மேள கலைஞர்கள் இசைத்தபடி வந்தனர்.
இது குறித்து இசக்கியப்பன் கூறுகையில், “தவெக தலைவர் விஜய், வரும் சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெற்று தமிழ்நாட்டின் முதலமைச்சராக பதவியேற்க வேண்டும்.
எங்கள் கட்சி பொதுக்கூட்டங்களில் இனி எவ்வித அசம்பாவிதங்களும் நடைபெறக்கூடாது என்பதற்காக நானும், எனது ஊர் பொதுமக்களும் கார்த்திகை மாத கடைசி தினத்தில் அம்மனை வழிபட்டு நேர்த்திக்கடன் செலுத்தினோம்.
இந்த தகவல் தெரிந்ததும், விஜய் எங்களை நேரில் அழைத்து பேசுவார் என நம்புகிறோம். வரும் தேர்தலில் விஜய் வெற்றி பெற்று தமிழக முதலமைச்சராக அரியணை ஏறுவார்” என தெரிவித்துள்ளார்.