பாலியல் வழக்கு விவகாரம் - பிரபல நடிகர் விஜய் பாபு பாஸ்போர்ட் ரத்து - வெளியுறவு அமைச்சகம் அதிரடி
மலையாளத்தில் பிரபல நடிகராகவும், தயாரிப்பாளராகவும் வலம் வருபவர் நடிகர் விஜய் பாபு. இவர் மீது இளம் நடிகை ஒருவர் பாலியல் புகார் கொடுத்துள்ள நிலையில், மற்றொரு பெண் புகார் கொடுத்துள்ள சம்பவம் கேரளா சினிமா வட்டாரத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மலையாளத்தில் பல வெற்றி படங்களை கொடுத்துள்ள நடிகர் விஜய் பாபு, ஃபிரைடே ஃபிலிம் ஹவுஸ் எனும் தயாரிப்பு நிறுவனத்தையும் நடத்தி வருகிறார். இவருடைய ‘பிலிப்ஸ் அண்ட் தி மங்கி பென்’ என்ற படம் கேரளா மாநிலத்தின் சிறந்த திரைப்பட விருதை வென்றது.
இந்நிலையில், கடந்த ஏப்ரல் 22-ம் தேதி நடிகர் விஜய் பாபு மீது, இளம் நடிகை ஒருவர் போலீசில் பாலியல் புகார் அளித்தார்.
அந்த புகாரில், விஜய்பாபு தன்னை பலமுறை பாலியல் பலாத்காரம் செய்ததாகவும், தனக்கு பட வாய்ப்பு தருவதாக கூறி தன்னிடம் தவறாக நடந்து கொண்டதாகவும் தெரிவித்துள்ளார். பெண் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதற்கிடையில், அவர் வெளிநாடு தப்பிச் செல்லாமல் இருக்க லுக் அவுட் நோட்டீசும் பிறப்பிக்கப்பட்டுள்ளது.
தன் மீது சுமத்தப்பட்டுள்ள குற்றத்தை தனது ஃபேஸ்புக் லைவ்வில் வந்து நடிகர் விஜய் பாபு மறுப்பு தெரிவித்தார். நடிகை தொடர்ந்திருக்கும் வழக்கை எதிர்த்து மான பங்க வழக்கு தொடுக்க போகிறேன் என்று பேசினார்.
இந்த வழக்கு தொடர்பாக, விஜய்பாபு முன்ஜாமீன் கேட்டு கேரள ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்தார். இந்த மனுவை பரிசீலிக்க மறுத்த ஐகோர்ட்டு, கோடை விடுமுறைக்குப் பின்னர் விசாரிக்க முடிவு செய்துள்ளது.
இந்நிலையில், விஜய் பாபுவின் பாஸ்போர்ட்டை மத்திய வெளியுறவு அமைச்சகம் ரத்து செய்துள்ளது. மேலும், இன்டர்போல் உதவியுடன் போலீசார் விஜய் பாபுவை கைது செய்ய திட்டமிட்டுள்ளனர்.