திமுகவினர் விரைவில் பானிபூரி விற்பார்கள் : அமைச்சர் பொன்முடிக்கு குஷ்பு பதிலடி

Khushbu DMK
By Irumporai May 14, 2022 10:48 AM GMT
Report

 கோவை பாரதியார் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் ஆளுநர் ஆர்.என்.ரவி முன்னிலையில் இந்தி மொழி தொடர்பாக உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி தெரிவித்த கருத்து பரபரப்பை ஏற்படுத்தியது.

கோவை பாரதியார் பல்கலைக்கழகத்தின் 37 வது பட்டமளிப்பு விழாவில் ஆளுநர் ஆர்.என்.ரவி, உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி, இஸ்ரோ முன்னாள் தலைவர் சிவன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். இதில் பேசிய அமைச்சர் பொன்முடி, நாங்கள் எந்த மொழிக்கும் எதிரானவர்கள் அல்ல.

எனவே இந்திக்கும் எதிரானவர்கள் அல்ல. விரும்புபவர்கள் எந்த மொழியை வேண்டுமானாலும் படிக்கலாம். இந்தி விருப்ப பாடமாக இருக்க வேண்டுமே தவிர கட்டாய பாடமாக இருக்கக்கூடாது. தமிழர்களுக்கு பிறமொழிக்காரர்களிடம் உரையாட ஆங்கிலமும், உள்ளூரில் தமிழும் இருக்கும்போது இந்தியை ஏன் கற்க வேண்டும்?. இந்தி படித்தவர்களுக்கு வேலை கிடைக்கும் என்றார்கள்.

ஆனால் கோவையில் பானிபூரி விற்பவர்கள் எல்லாம் யார்? அது ஒரு காலம். எந்த மொழியை கற்கவும் தயாராக உள்ளோம். மூன்றாவது மொழியாக எதை வேண்டுமானாலும் படிக்கலாம். ஆனால், இந்தியை கட்டாயமாக்கக்கூடாது.

புதிய கல்விக் கொள்கையில் உள்ள நல்ல திட்டங்களை பின்பற்ற தயார். தமிழ்நாட்டின் பிரச்சனைகளை, மக்களின் உணர்வுகளை ஆளுநர் புரிந்து கொள்ள வேண்டும். அதனை மத்திய அரசிடம் தெரியப்படுத்த வேண்டும்.

இதனை ஆளுநர் தவறாக எடுத்துக் கொள்ள மாட்டார் என நினைக்கிறேன்” என அவர் தெரிவித்தார். அமைச்சர் பொன்முடியின் இந்த பேச்சு சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு வைரலானது. மேலும் பானி பூரி விற்பவர்கள் பற்றி கேலி செய்வதுபோல ஏற்கெனவே பல நூறு மீம்கள் இணையத்தில் இருந்த நிலையில் அவைகளும் நேற்று ட்ரெண்டாகின.

இந்த நிலையில் இந்தி விவகாரம் தொடர்பாக அமைச்சர் பொன்முடிக்கு பாஜக பிரமுகரும் நடிகையுமான குஷ்பு பதிலடி கொடுத்துள்ளார். இதுகுறித்து ட்விட்டரில் பதிவிட்டுள்ள அவர், ''திமுகவில் இந்தி பேசும் அமைச்சர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் விரைவில் பானிபூரி விற்கபோகிறார்கள்.

அதனை நாம் பார்க்கத்தான் போகிறோம். இந்தி மொழிக்கு எதிராக இதுபோன்றதொரு கருத்து, அதுவும் உயர்கல்வித்துறை அமைச்சர் தெரிவித்திருப்பது வெட்கக்கேடு. இதுபோன்ற நபர்களிடம் நாம் வேறு எதை எதிர்பார்க்க முடியும்?.

அமைச்சர் பொன்முடியின் கருத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஏற்றுக்கொண்டாரா? என்பதை தெரியப்படுத்த வேண்டும்'' என குஷ்பு காட்டமாக தெரிவித்துள்ளார்.