உ.பி.யில் இந்துக்கள் எண்ணிக்கை குறையும்: விஹெச்பி கடும் எதிர்ப்பு
உத்தரப் பிரதேசத்தின் மக்கள் தொகை கட்டுப்பாடு சட்ட வரைவு மசோதாவுக்கு ஆர்எஸ்எஸ் ஆதரவு அமைப்பான விஷ்வ இந்து பரிஷத் அமைப்பு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.
உலக மக்கள் தொகை நாளையொட்டி, உத்தரப் பிரதேச அரசு மக்கள்தொகை கட்டுப்பாட்டு வரைவு மசோதா ஒன்றை தாக்கல் செய்தது. அதன்படி இரண்டு குழந்தைகளுக்கு மேல் பெற்றுக்கொண்டால் அரசு வேலைகள், அரசு மானியங்கள் கிடைக்காது, உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிட முடியாது என்பது உள்ளிட்ட கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன.
இந்த வரைவு மசோதா குறித்து பொதுமக்கள் வரும் 19ஆம் தேதிக்குள் கருத்துகளை தெரிவிக்கலாம் எனக் கூறப்பட்டுள்ளது. இதற்கு ஆர்எஸ்எஸ் ஆதரவு அமைப்பான விஷ்வ இந்து பரிஷத் அமைப்பும் கடுமையாக எதிர்த்துள்ளது. இது தொடர்பாக மாநில சட்ட ஆணையத்திற்கு கடிதம் ஒன்றையும் அந்த அமைப்பு அனுப்பியுள்ளது.
அதில் இரண்டு குழந்தை என்ற விதிமுறை வெவ்வேறு சமூகங்களுக்கிடையில் ஏற்றத்தாழ்வை அதிகரிக்க வழிவகுக்கும். மக்கள் தொகை குறைந்த இடங்களில் இந்துக்களின் எண்ணிக்கை குறைந்து வருகிறது. அதேநேரம் பிற சமூகத்தினர் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இந்த நிலைதான் தற்போது அசாம் மற்றும் கேரளாவில் நிகழ்ந்து வருகிறது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் வேலை பார்க்கும் வயதுள்ள பிரிவினருக்கும், அவர்களைச் சார்ந்திருக்கும் பிரிவினருக்கும் இடையிலான சமநிலையையும் இந்த மக்கள் தொகை தடுப்பு திட்டம் குலைக்கும். எனவே உத்தரப் பிரதேசம் இதுபோன்ற சூழ்நிலையில் இறங்குவதைத் தவிர்க்க வேண்டும். ஏற்றத்தாழ்வைத் தீர்க்கும் வகையில் கொள்கையை வடிவமைக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.