ராஜராஜ சோழன், பிரபாகரனின் வரலாற்றை இயக்கும் வெற்றிமாறன் : சீமான் அறிக்கை
ராஜராஜ சோழன் மற்றும் விடுதலை புலிகள் இயக்கத்தின் தலைவர் பிரபாகரன் ஆகியோரின் உண்மை வரலாறை இயக்குநர் வெற்றிமாறன் இயக்குவார் என்றும் அதை தான் தயாரிக்க உள்ளதாக நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் அறிவித்துள்ளார்
வெற்றிமாறன் பேச்சு
விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவனின் 60 வது பிறந்தநாளை முன்னிட்டு சமத்துவம், மக்கள் எழுச்சி, ஒன்று சேர் என்ற தலைப்பில் குறும்பட மற்றும் ஆவணப்பட கலை திருவிழா கடந்த சனிக்கிழமை நடைபெற்றது.
இதில் கலந்துகொண்டு பேசிய இயக்குநர் வெற்றிமாறன் திராவிட இயக்கம் தமிழ் சினிமாவை கையில் எடுத்ததன் விளைவுதான் தமிழ்நாடு இன்னும் மதசார்பற்ற மாநிலமாகவும், பல புற சக்திகளின் ஊடுருவலை தடுக்கக்கூடிய பக்குவத்துடன் இருக்கிறது என்று நினைக்கிறேன்.
அடையாளங்கள் பறிக்கப்படும்
கலையை இன்று நாம் சரியாக கையாள வேண்டும். இதனை கையாள தவறினால் வெகு சீக்கிரம் நிறைய அடையாளங்கள் பறிக்கப்படும். தொடர்ந்து நம்மிடம் இருந்து அடையாளங்கள் பறித்துக் கொண்டு இருக்கிறார்கள்.
வள்ளுவருக்கு காவி உடை கொடுப்பது, ராஜராஜ சோழனை இந்து அரசனாக்குவது இப்படி தொடர்ந்து நடந்துகொண்டு இருக்கிறது. இது சினிமாவிலும் நடக்கும்." என்றார். வெற்றிமாறனின் கருத்துக்கு பாஜகவினர் மற்றும் வலதுசாரிகள் கண்டனம் தெரிவித்தனர்.
அதேநேரம் திருமாவளவன், சீமான் உள்ளிட்டோரும் பெரியாரிய, அம்பேத்கரிய, கம்யூனிச, தமிழ் தேசிய சிந்தனையாளர்கள் வெற்றிமாறன் பேச்சுக்கு ஆதரவு தெரிவித்தனர்.
படம் இயக்க உள்ள சீமான்
இந்த நிலையில் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான், தமிழர்களின் போற்றுதற்குரிய மூதாதை, அரசனுக்கரசன் அருள்மொழிச் சோழனின் உண்மையான வரலாற்றையும், இந்த நூற்றாண்டின் இணையற்ற விடுதலைப் போராளி தமிழ்த்தேசிய தலைவர் அண்ணன் மேதகு வே.பிரபாகரன் அவர்களின் வரலாற்றையும் ஆகச்சிறந்த கலைவடிவமாக நான் தயாரிக்க, என் அன்புத்தம்பி வெற்றிமாறன் இயக்குவார்.
வரலாற்றில் புறக்கணிக்கப்பட்ட இனத்தின் மக்கள், தங்களுக்கான வரலாற்றைத் தாங்களே எழுதுவார்கள் என்ற அறிவாசான் அண்ணல் அம்பேத்கரின் புரட்சி மொழிக்கேற்ப, ஒரு நாள் எங்களுக்கான வரலாற்றை நாங்களே எழுதும் நாள் வரும். அன்றைக்கு தமிழர்கள் நாங்கள் யாரென்று உலகத்திற்குத் தெரியவரும்." என்று குறிப்பிட்டுள்ளார்.