"அற்புதம் அம்மாளின் போராட்ட வாழ்க்கையை படமாக்க விரும்புகிறேன்...’ - இயக்குநர் வெற்றிமாறன்
முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் சிறை தண்டனை அனுபவித்து தற்போது பிணையில் இருந்த பேரறிவாளன், தன்னை விடுதலை செய்யக் கோரி உச்சநீதிமன்றத்தில் ஏற்கெனவே மனு தாக்கல் செய்திருந்தார்.
சுமார் 30 ஆண்டுகளாக சிறை தண்டனை அனுபவத்து வரும் பேரறிவாளன், தன்னை விடுதலை செய்யக் கோரிய வழக்கில் வாதங்கள் அனைத்தும் முடிவடைந்த நிலையில் கடந்த வாரம் தீர்ப்பு தேதி குறிப்பிடாமல் உச்சநீதிமன்றம் ஒத்தி வைத்தது.
இன்று விசாரணைக்கு வந்த இந்த வழக்கில், உச்ச நீதிமன்ற நீதிபதி எல்.நாகேஸ்வரராவ் தலைமையிலான அமர்வு தீர்பளித்து உத்தரவிட்டனர்.
மேலும், ஆளுநர் 161வது பிரிவில் முடிவெடுக்க தாமதப்படுத்தியதால் 142 சட்டப்பிரிவை பயன்படுத்தி விடுதலை செய்வதாக உத்தரவிட்டனர். பேரறிவாளன் விடுதலையை பல அரசியல் கட்சித் தலைவர்கள் வரவேற்று கருத்துக்களை சமூகவலைத்தளங்களில் பகிர்ந்து வருகின்றனர்.
இந்நிலையில் பிரபல இயக்குநர் வெற்றி மாறன், அற்புதம் அம்மாளின் போராட்ட வாழ்க்கையை படமாக்க போகிறேன் என்று தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர், பேரறிவாளனின் தாயார் அற்புதம் அம்மாளின் போராட்ட வாழ்க்கையை படமாக உருவாக்க விரும்புகிறேன். அவரின் 31 ஆண்டு கால சட்டப் போராட்டத்தைக் காட்சிப்படுத்துவது ரொம்பவே சவாலானது என்று தெரிவித்துள்ளார்.