இந்திய அணியில் இருக்கும் பெரிய பிரச்சனை இதுதான் - ஓபனாக பேசிய கே.எல்.ராகுல்
டெஸ்ட் தொடரில் இந்திய அணியின் துணை கேப்டனாக நியமிக்கப்பட்ட கே எல் ராகுல் அணியில் நிலவும் குழப்பம் குறித்து வெளிப்படையாக பேசியுள்ளார்.
தென்னாப்பிரிக்கவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி 3 டெஸ்ட் மற்றும் ஒருநாள் தொடரில் பங்கேற்கிறது. இதில் முதல் டெஸ்ட் போட்டி நாளை செஞ்சூரியனில் தொடங்குகிறது. இதற்காக இரு அணி வீரர்களும் தீவிர பயிற்சி மேற்கொண்டு வருகின்றனர்.
இதுவரை இந்திய அணி 7 முறை தென்னாபிரிக்க மைதானத்தில் டெஸ்ட் தொடரில் விளையாடி உள்ளது. ஆறுமுறை தென்னாப்பிரிக்க அணியே வெற்றி பெற்றுள்ளது. ஒரு முறை டிராவில் முடிவடைந்தது. இதனால் இந்த முறை எப்படியாவது வெற்றிப் பெற வேண்டும் என்ற முனைப்புடன் இந்திய அணி களமிறங்குவதால் ரசிகர்கள் இப்போட்டியை ஆவலுடம் எதிர்நோக்கியுள்ளனர்.
இந்த நிலையில் ரோகித் சர்மா இல்லாததால் தென்னாபிரிக்கா அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இந்திய அணியின் புதிய துணை கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ள கே எல் ராகுல், ஐந்தாவது பேட்டிங் யாரை களமிறக்கவேண்டும் என்ற மிகப் பெரும் குழப்பம் தேர்வாளர்கள் மத்தியில் நிகழ்ந்து வருவதாக பத்திரிக்கையாளர்களுக்கு அளித்த பேட்டியில் தெரிவித்துள்ளார்.
எப்பொழுதும் இந்திய அணியின் ஐந்தாவது வீரராக களம் இறங்கும் ரஹானேவை நம்மால் அணியிலிருந்து நீக்க முடியாது, ஏனென்றால் அவர் வெளிநாட்டு மைதானங்களில் மிக சிறந்த முறையில் விளையாடி பலமுறை தனது திறமையை நிரூபித்துள்ளார். குறிப்பாக ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான போட்டியிலும் இங்கிலாந்து அணிக்கு எதிரான போட்டியிலும் தன்னுடைய சிறப்பான ஆட்டத்தின் மூலம் இந்திய அணியின் வெற்றிக்கு உதவிகரமாக இருந்திருக்கிறார்.
அதேசமயம் இந்திய அணியின் இளம் வீரர்களான ஸ்ரேயாஸ் ஐயர் மற்றும் ஹனுமா விஹாரி ஆகிய இருவரையும் ஆடும் லெவனில் எடுத்தால் இந்திய அணி இன்னும் கூடுதல் பலமாக இருக்கும் என்பதால் இவர்களை எந்த இடத்தில் களமிறக்க வேண்டும் என்ற குழப்பமும் ஏற்பட்டு வருவதாக கே.எல்.ராகுல் தெரிவித்துள்ளார்.