என் வழி தனி வழி..ரஜினியின் தீவிர ரசிகராக மாறி கிரிக்கெட் வீரர்
ஐபிஎல் போட்டியின் புதிய நட்சத்திரமான வெங்கடேஷ் ஐயர், கொல்கத்தா அணி வீரராக அசத்தி வருகிறார்.
இதுவரை விளையாடிய நான்கு ஐபிஎல் ஆட்டங்களிலும் 41, 53, 18, 14 என ரன்கள் எடுத்துள்ளார். தில்லிக்கு எதிராக 2 விக்கெட்டுகளும் வீழ்த்தியுள்ளார்.
இதனால் ஐபிஎல் போட்டியின் புதிய நட்சத்திரம், புதிய ஆல்ரவுண்டராக ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வருகிறார். இந்தூரில் வசிக்கும் 26 வயது வெங்கடேஷ் ஐயர், தமிழ்க் குடும்பத்தைச் சேர்ந்தவர்.
இதனால் பல பேட்டிகளில் ரஜினியின் ரசிகனாக இருப்பது பற்றி பெருமையாகப் பேசி வருகிறார். ஒரு பேட்டியில் ரஜினி பற்றி அவர் கூறியதாவது:
ரஜினியின் மிகப்பெரிய ரசிகன் நான். ரஜினியை நேரில் பார்க்கும் தருணம் தான் என் வாழ்வின் முக்கிய நிகழ்வாக இருக்கும்.
ரஜினி நடித்த அனைத்துப் படங்களையும் நான் பார்த்துள்ளேன். ஒருமுறை இந்தூரில் இருந்து சென்னைக்குச் சென்று, திரையரங்கில் ரஜினி படத்தைப் பார்த்தேன்.
அந்தளவுக்கு அவருடைய தீவிரமான ரசிகன். அவருடைய வசனங்களில் எனக்குப் பிடித்தது, என் வழி தனி வழி என்றார்.
இன்ஸ்டகிராமில் எழுதும் பதிவுகளில் ரஜினி பட வசனங்களைப் பயன்படுத்தி வருகிறார் வெங்கடேஷ் ஐயர். தன்னுடைய சமீபத்திய இன்ஸ்டகிராம் பதிவில் ரஜினி பட வசனமான, லேட்டா வந்தாலும் லேட்டஸ்டா வருவேன் என எழுதியுள்ளார். கடந்த ஜூன் மாதம், என் வழி தனி வழி என ரஜினியின் மற்றொரு பட வசனத்தைத் தமிழிலேயே எழுதியுள்ளார்.