திமுக கூட்டணியில் இருந்து விலகிய தவாக - வேல்முருகன் அதிரடி
திமுக கூட்டணியில் இருந்து விலகுவதாக தவாக தலைவர் வேல்முருகன் அறிவித்துள்ளார்.
திமுக கூட்டணியில் இருந்து விலகிய தவாக
2026 தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலுக்கு கூட்டணி கட்சிகளிடம் தொகுதி பங்கீட்டை இறுதி செய்வதில் திமுக தீவிரம் காட்டி வருகிறது.
திமுக கூட்டணியில் இதுவரை, 43 தொகுதிகள் கூட்டணி கட்சிகளுக்கு ஒதுக்கப்பட்டுள்ள நிலையில், இன்னும் விசிக, தேமுதிக, மநீம, மார்க்சிஸ்ட் உள்ளிட்ட கட்சிகளுடன் தொகுதி பங்கீடு இறுதி ஆகவில்லை.

கடந்த 2021 தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலில் திமுக கூட்டணியில் அங்கம் வகித்த வேல்முருகனின் தமிழக வாழ்வுரிமை கட்சிக்கு ஒரு தொகுதி ஒதுக்கப்ட்டது.
உதயசூரியன் சின்னத்தில் பண்ருட்டி தொகுதியில் போட்டியிட்ட வேல்முருகன் வெற்றி பெற்றார்.
இந்த தேர்தலில் தவாக 2 தொகுதி கேட்டதாகவும், திமுக ஒரு தொகுதி மட்டுமே வழங்க முன்வந்தது.
இந்நிலையில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய தவாக தலைவர் வேல்முருகன், "2019, 2021, 2024 மற்றும் உள்ளாட்சி தேர்தலில் திமுக கூட்டணியில் பயணித்தோம். இம்முறை கூடுதல் இடங்கள் கேட்ட நிலையில், ஒரு இடம் வழங்குவதாகத் தெரிவித்தனர்.

மக்களுக்கான 10 அம்ச கோரிக்கைகளையும் முன்வைத்தோம். ஆனால், திமுக அதனை பொருட்படுத்தவில்லை. சட்டமன்றததுக்கு உள்ளேயும், வெளியேயும் தமிழக அரசிடம் பல கோரிக்கைகளை முன்வைத்தோம் நாங்கள் முன்வைத்த எந்தக் கோரிக்கையையும் திமுக அரசு பொருட்படுத்தவில்லை.
இன்று முதல் திமுக கூட்டணியில் இருந்து விலகுகிறோம். எங்களது 10 கோரிக்கைகளை ஏற்கும் கட்சிகளுடன் கூட்டணியில் இணைவது குறித்து முடிவெடுக்கப்படும். பாஜக இடம்பெறும் கூட்டணியில் நாங்கள் சேரமாட்டோம் என்பதை அறிவிக்கிறேன்.
தமிழகத்தில் அதிகாரிகளின் ஆட்சிதான் நடந்து வருகிறது; திமுக கூட்டணியில் இருந்து என்னை வெளியேற்ற அதிகாரிகள் அறிவுரை அதிகாரிகளின் பேச்சை கேட்டு தமிழக வாழ்வுரிமை கட்சியை திமுக புறக்கணித்திருக்கிறது" என தெரிவித்துள்ளார்.