எல்லாத்துக்கும் காரணம் கே.சி.வீரமணிதான்: கண்ணீர் விட்ட அமைச்சர் காரணம் என்ன?
வாணியம்பாடி தொகுதியில் தனக்கு வாய்ப்பு கொடுக்காதற்கு முக்கியக் காரணம் அம்மாவட்டத்தின் அதிமுக செயலாளராக உள்ள கே.சி. வீரமணிதான் என நிலோபர் கபில் தெரிவித்துள்ளார். வாணியம்பாடி தொகுதியின் சிட்டிங் எம்.எல்.ஏ.வும் மறைந்த முதல்வர் ஜெயலலிதா அமைச்சரவையில் தொழிலாளர் நலத்துறை அமைச்சராகவும் இருந்த நிலோபர் கபிலுக்கு வாய்ப்பு வழங்கப்படவில்லை.
இதனால் அவரது ஆதரவாளர்கள் போராட்டமும் செய்தனர். திருப்பத்தூர் மாவட்ட அதிமுக துணைச் செயலாளராக உள்ள நிலோபர் கபிலுக்கு சீட் மறுக்கப்பட்டதன் முக்கியக் காரணம் அம்மாவட்டத்தின் அதிமுக செயலாளராக உள்ள கே.சி. வீரமணியுடனான மோதல் போக்கே என பேசப்பட்டு வருகிறது. வாய்ப்பு வழங்கப்படாத நிலோபர் கபில் நேற்று (12.03.2021) சென்னையிலிருந்து வாணியம்பாடி திரும்பினார்.
அப்போது செய்தியாளர்களைச் சந்தித்த அவர், அதிமுக எம்.எல்.ஏ.க்களாக இருந்த ஜெயந்தி, பார்த்திபன் மற்றும் பாலசுப்பிரமணி ஆகியோர் வீரமணி தொல்லையால்தான் வெளியேறி சென்றுவிட்டனர். எனக்கும் நிறைய தொந்தரவை அவர் கொடுத்துள்ளார். நான் ஒரு அமைச்சராக இருப்பதால் ஜெயலலிதாவுடைய மரியாதைக்காகவும், முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் மரியாதைக்காகவும் நான் யாரிடமும் புகார் செய்ததே இல்லை.
மக்கள் மத்தியில் என்னை அவமானப்படுத்தியதால்தான் நான் இன்றைக்கு பேசிக்கொண்டிருக்கிறேன். எம்.பி. தேர்தலில் 24 ஆயிரம் வாக்குகள் வாணியம்பாடியில் கிடைக்கவில்லை என்று அமைச்சர் தரப்பில் குற்றச்சாட்டு கூறுகிறார்கள். பி.ஜே.பியுடன் கூட்டணி வைத்தால், முஸ்லிம் சமுதாயத்தில் கொஞ்சம் ஓரங்கட்டத்தான் செய்வார்கள்.
பி.ஜே.பி. கூட்டணியிலிருந்தும் கூட அமைச்சராக நீடித்த பிறகு என்னுடைய சமுதாயத்தினர் என்னை என்னென்ன பேசினார்கள் என்பது எனக்குத்தான் தெரியும்” என்று கண்ணீர் விட்டு அழுதார்.