கமலின் முடிவு குறித்து திருமாவளவன் நெகிழ்ச்சி
வரும் சட்டமன்ற தேர்தலில் போட்டியிட போவதில்லை எனவும், திமுக கூட்டணிக்கு ஆதரவு என்ற நிலைப்பாட்டில் உறுதியாக இருப்பதாகவும் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல் ஹாசன் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.
சட்டமன்ற தேர்தலுக்காக திமுகவுடன் கூட்டணி கட்சிகள், தொகுதி பங்கீடு சம்பந்தமாக கடந்த சில வாரங்களாக பேச்சுவார்த்தை நடத்தி வந்தது.அந்த வகையில் மக்கள் நீதி மய்யம் கட்சியும் இரண்டு கட்டமாக பேச்சுவார்த்தை நடத்தியது.

இதில் மநீம கட்சிக்கு இரண்டு தொகுதிகளும், உதயசூரியன் சின்னத்தில் போட்டி எனவும் திமுக பேசியதாக கூறப்பட்டது.
இந்நிலையில் நேற்றைய தினம் முதலமைச்சரை சந்தித்த மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல் ஹாசன் வரும் சட்டமன்ற தேர்தலில் போட்டியில்லை என தனது முடிவை அறிவித்திருந்தார். அவருடைய இந்த முடிவுக்கு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பெரும் வரவேற்பினை கொடுத்தார்.

திருமாவளவன் நெகிழ்ச்சி பதிவு
இந்நிலையில், விசிக தலைவர் திருமாவளவன் எம்பி, கமலின் இந்த முடிவு குறித்து தனது எக்ஸ் தளத்தில் பதிவு ஒன்றினை பகிர்ந்துள்ளார்
அதில் குறிப்பிடுகையில், "எங்களுடைய பங்கு எங்கே என்று நெருக்கடியான சூழ்நிலையில் கேட்பது ஒரு நல்ல சகோதரனின் அடையாளமாக இருக்க முடியாது.
அது தியாகம் கிடையாது. கடமை. மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் அண்ணன் கமல் ஹாசன் அவர்களுடைய இந்த அதீத உணர்வு, மிகவும் ஆழமான, தொலைநோக்குப் பார்வை கொண்ட அரசியல் புரிதலின் வெளிப்பாடு.
தனது கையறுநிலையை நட்புறவில் சிறு கீறலும் ஏற்படாத விதமாக நனிநாகரித்துடன் தெளிவுப்படுத்தியுள்ளது.

இது அவருடைய அறிவு முதிர்ச்சியையும், அதி உச்சமான பக்குவத்தையும் உறுதிப்படுத்துகிறது. திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியின் வெற்றியை மட்டுமே கருத்தில் கொண்டு துணிச்சலாக அவர் எடுத்துள்ள இந்த முடிவு என்றென்றும் அரசியல் வரலாற்றில் நிலைபெறக்கூடிய ஒன்றாகும்.
அரசியல் ஆதாயத்தை கருத்தில் கொண்டு தான்தோன்றித் தனமாக உணர்ச்சிவசப்பட்டுத் தாறுமாறாக வெடித்துச் சிதறவில்லை. திமுக தலைமையிலான கூட்டணியின் வெற்றிக்குத் தீவிரமாக பணியாற்றுவோம்.
நாங்கள் போட்டியிட விரும்பவில்லை என்று அண்ணன் கமல் ஹாசன் எடுத்துள்ள இந்த நிலைப்பாடும் காலத்தால் போற்றப்படும் அரசியல் கண்ணியம். மக்கள் மத்தியில் அவர்மீது நிலவும் அதி உயர்வாக நம்திப்பு பல மடங்கு பல்கிப் பெருகும் என தனது பதிவில் நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்டுள்ளார்.