ஹெலிகாப்டர் விபத்தில் பிழைத்த குரூப் கேப்டன் வருண் சிங் நிலைமை என்ன? - வெளியான தகவல்
ஹெலிகாப்டர் விபத்தில் உயிர் பிழைத்த குரூப் கேப்டன் வருண் சிங் தொடர்ந்து கவலைக்கிடமாக இருந்தாலும் உடல் நிலை சீராகவே இருப்பதாக விமானப்படை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நீலகிரி மாவட்டம் குன்னூரில் கடந்த 8 ஆம் தேதி காட்டேரி எனும் பகுதியில் நடந்த ஹெலிகாப்டர் விபத்தில் இந்தியாவின் முதல் முப்படை தலைமை தளபதி பிபின் ராவத், அவரது மனைவி மதுலிகா ராவத், 11 வீரர்கள் என மொத்தம் 13 பேர் உயிரிழந்தனர்.இந்த விபத்தில் குரூப் கேப்டன் வருண் சிங் மட்டுமே உயிர் பிழைத்தார். அவருக்கு 80% தீக்காயங்கள் ஏற்பட்டுள்ள நிலையில் பெங்களூருவில் தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வருகிறார்.
இந்த நிலையில், வருண் சிங் உடல் நிலை தொடர்ந்து கவலைக்கிடமாக உள்ளது என விமானப்படை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அதேசமயம் கவலைக்கிடமாக இருந்தாலும் உடல்நிலை சீராக இருப்பதாகவும் விமானப்படை அதிகாரிகள் தெரிவித்தனர்.
இதனிடையே வருணுக்கு தலைசிறந்த மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வருகின்றனர். என் மகனுக்காக இந்த ஒட்டுமொத்த தேசமே பிரார்த்தனை செய்கின்றது. மக்களின் அன்பைக் கண்டு நான் உணர்ச்சி மிகுதியில் இருக்கிறேன். வருணைப் பற்றி நிறைய பேர் நலன் விசாரிக்கின்றனர்.
வருண் நலமடைய பிரார்த்தனை செய்கின்றனர். அவருக்கு இத்தகைய அன்பும் அரவணைப்பும் கிடைத்துள்ளது பெருமிதம் கொள்ளச் செய்கிறது. வருண் ஒரு ராணுவ வீரர். போராளி. அவர் வெற்றிகரமாக மீண்டு வருவார் என ருண் சிங்கின் தந்தை கே.பி.சிங் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.