பாஜக குழுவில் இருந்து மேனகா காந்தி, வருண்காந்தி திடீர் நீக்கம் - தேசிய அரசியலில் பரபரப்பு
பாஜக தேசிய நிர்வாகக் குழுவில் இருந்து முன்னாள் மத்திய அமைச்சர் மேனகா காந்தி, அவரின் மகனும், எம்.பி.யுமான வருண் காந்தி இருவரும் நீக்கப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
லகிம்பூர் கெரியில் கடந்த ஞாயிற்றுக்கிழமை மத்திய அமைச்சர் மிஸ்ரா, துணை முதலமைச்சருக்கு எதிராகப் போராடிய விவசாயிகளுக்கும், பாஜகவினருக்கும் இடையே மோதல் வெடித்தது. அப்போது விவசாயிகள் கூட்டத்துக்குள் மந்திரியின் வாகனம் புகுந்ததில் 4 விவசாயிகள் உள்ளிட்ட 9 பேர் உயிரிழந்தனர்.
இதுதொடர்பாக பாஜக எம்.பி. வருண் காந்தி டுவிட்டரில் கருத்து தெரிவித்திருந்தார். அதில் வீடியோ மிகத் தெளிவாக இருக்கிறது. கொலை மூலம் போராட்டக்காரர்களின் வாயை அடைக்க முடியாது. ஒவ்வொரு விவசாயியின் மனதிலும் அகங்காரம், கொடூரம் பற்றிய செய்தி நுழைவதற்கு முன், அப்பாவி விவசாயிகளின் ரத்தத்துக்குக் காரணமாணவர்களை நீதி முன் நிறுத்தி தண்டனை பெற்றுத்தர வேண்டும் எனத் கூறியிருந்தார்.
இதனிடையே பாஜகவின் 80 உறுப்பினர்கள் கொண்ட புதிய நிர்வாகக் குழு உறுப்பினர்கள் பட்டியலை தேசியத் தலைவர் ஜே.பி.நட்டா இன்று வெளியிட்டார். அதில் நிர்வாகக் குழுவில் இருந்து முன்னாள் மத்திய அமைச்சர் மேனகா காந்தி, பில்பித் எம்.பி. வருண் காந்தி ஆகியோர் நீக்கப்பட்டுள்ளனர். இதனைத் தொடர்ந்து நவம்பர் 7 ஆம் தேதி புதிய தேசிய செயற்குழு உறுப்பினர்கள் கூட்டம் டெல்லியில் நடைபெற உள்ளதாக அக்கட்சி தெரிவித்துள்ளது.