பிரபல பாடகி வாணி ஜெயராம் மரணம் - இறுதி ஊர்வலம் தொடங்கியது...!
பிரபல பாடகி வாணி ஜெயரம் மரணம்
தமிழ், தெலுங்கு, கன்னடம் உள்பட 19 மொழிகளில் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பாடல்களை இதுவரை பாடிய பிரபல பின்னணி பாடகி வாணி ஜெயராம் நேற்று நுங்கம்பாக்கத்தில் உள்ள அவரது வீட்டில் நெற்றியில் காயங்களுடன் உயிரிழந்த நிலையில் மீட்கப்பட்டார்.
அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக ஓமந்தூரார் அரசு மருத்துவமனைக்கு எடுத்து செல்லப்பட்டது. இது தொடர்பாக இந்த மரணம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். பாடகி வாணி ஜெயராம் (78) வீட்டில் தவறி விழுந்து உயிரிழந்ததாக தகவல் வெளியானது. அவரது மறைவு அனைத்து தரப்பினரையும் அதிர்ச்சியடைய செய்துள்ளது. அவருடைய மறைவிற்கு சினிமா நட்சத்திரங்கள், அரசியல் தலைவர்கள், ரசிகர்கள் சமூகவலைத்தளங்களில் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் அஞ்சலி
மறைந்த பின்னணி பாடகி வாணி ஜெயராம் உடலுக்கு காவல்துறை மரியாதை வழங்கப்பட உள்ளதாக காவல்துறை சார்பில் அறிவிப்பு வெளியிடப்பட்டது. இதனையடுத்து, சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள வீட்டில் அவரது உடல் வைக்கப்பட்டது. இன்று காலை முதல்வர் ஸ்டாலின் அவரது உடலுக்கு நேரில் அஞ்சலி செலுத்திய நிலையில் காவல் துறை சார்பில் மரியாதை வழங்கப்படுவதாக அறிவித்தார்.
இறுதி ஊர்வலம்
3 முறை தேசிய விருது உள்பட பல மாநிலங்களின் விருதுகளை அவர் பெற்றுள்ளார். அண்மையில் குடியரசு தினவிழாவையொட்டி அவருக்கு உயரிய விருதான பத்ம பூஷண் விருது அறிவிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், இன்று மதியம் 2 மணிக்கு வாணி ஜெயராம் இறுதி ஊர்வலம் நடைபெற்று அவரது உடல் சென்னை, பெசன்ட் நகரில் உள்ள மின் மயானத்தில் இன்று தகனம் செய்யப்படும் என்று தகவல் வெளியானது. தற்போது அவருடைய இறுதி ஊர்வலம் தொடங்கியுள்ளது.

தமிழ் படிக்க ஆசிரியர் இல்லையே என்ற கவலை இனியும் வேண்டாம். uchchi.com இன் இணையவழிக் கற்கை நெறிகளில் இன்றே இணையுங்கள்.