ஆண்கள் வருமானம் குறித்து பேசிய வானதி சீனிவாசன் பேச்சால் சட்டப்பேரவையில் சலசலப்பு..!
தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் இன்று காலை தொடங்கியது.இன்றை நாளின் கூட்டத்தொடரில் கைத்தறி,வணிகவரி மற்றும் பதிவுத்துறை மீதான மானியக் கோரிக்கை நடைபெற உள்ளது.
இதனிடையே காலை கேள்வி நேரம் நடைபெற்றது.சட்டமன்ற உறுப்பினர்களின் கேள்விகளுக்கு துறை அமைச்சர்கள் பதில் அளித்து வருகின்றனர்.
இந்நிலையில் சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசன் பேசினார்.அப்போது அவர் மகளிர் சுய உதவிக்குழுக்கள் வறுமையை போக்குவதில் முக்கிய பங்கு வகித்து வருகிறார்கள்.
பெண்களுடைய வருமானம் என்பது முழுக்க முழுக்க குடும்பத்திற்காக செலவு செய்யப்படுகிறது. குடும்பத்தின் பாதுகாப்பு,குழந்தைகளின் கல்வி என்று முழுக்க முழுக்க பெண்கள் கையில் கொடுக்கின்ற பணம் என்பது முழுமையாக குடும்பத்திற்கு பயன்படுத்தப்படுகிறது.
ஆண்கள் கையில் வரும் வருமானம் பீடி,சிகரெட்,டாஸ்மாக்னு போயிடும்.ஆனால் பெண்கள் கையில் கொடுக்கின்ற பணம் முழுமுழுக்க குடும்பத்திற்காக பயன்படுகிறது என்றார்.
அப்போது சட்டப்பேரவையில் இருந்த சக சட்டமன்ற ஆண் உறுப்பினர் கூச்சலிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
அப்போது சபாநாயகர் அப்பாவு எல்லாம் அமைதியாக இருங்கள்,என்று கூறி வானதி சீனிவாசனிடம் மகளிர் சுய உதவிக்குழுக்கள் உற்பத்தி செய்யும் பொருட்களை ஆன்லைனில் விற்பனை செய்யமுடியுமா? என்பதை கேட்கிறீர்கள் அதை மட்டும் கேளுங்கள் என்றார்.
அதன் பின் வானதி சீனிவாசன் எல்லாரையும் அப்படி சொல்லவில்லை,மற்றவர்கள் எல்லாம் கொதிக்க வேண்டாம்.எதுக்கு கொதிக்கனும் தப்பு செஞ்சா தான கஷ்டம் என்றார் இதனால் மேலும் பேரவையில் சலசலப்பு ஏற்பட்டது.
அவரின் பேச்சுக்கு பதில் கொடுத்த சபாநாயகர் அப்பாவு யாரும் கொதிக்கலம்மா,எல்லாரும் சுமூத்தா இருக்காங்க என்றார்.
இதனால் சட்டப்பேரவையில் வானதி சீனிவாசன் பேச்சுக்கு எதிராக சக சட்டமன்ற உறுப்பினர்கள் கூச்சலிட்டத்தால் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.