தேர்தல் ஆணையத்தின் மீது பழி போடுவது தோல்வியை ஒப்புக்கொள்ளும் செயல் - வானதி சீனிவாசன்!
தேர்தல் தேதி அறிவிப்பை காங்கிரஸ், திமுக உள்ளிட்ட கட்சிகள் அரசியலாக்கி விமர்சனம் செய்கிறார்கள் என்று வானதி சீனிவாசன் தெரிவித்துள்ளார்.
தேர்தல் தேதி
நாடாளுமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில், தமிழகத்தில் அரசியல் கட்சிகள் கூட்டணி, தொகுதிப் பங்கீடு, வேட்பாளர்கள் தேர்வு என தேர்தல் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
நாடாளுமன்றத் தேர்தல் தேதியை இந்திய தலைமை தேர்தல் கமிஷனர் ராஜீவ் குமார் நேற்று அதிகாரப்பூர்வமாக அறிவித்தார். அடுத்த மாதம் ஏப்ரல் 19 முதல் ஜூன் 1-ம் தேதி வரை 7 கட்டங்களாக தேர்தல் நடைபெறுகிறது.
இதனிடையே தேர்தல் தேதியை அறிவித்ததில் தேர்தல் ஆணையம் சுதந்திரமாக செயல்பட்டதா என சந்தேகம் எழுந்துள்ளதாக காங்கிரஸ், திமுக, விடுதலைச் சிறுத்தைகள் உள்ளிட்ட கட்சிகள் குற்றம்சாட்டியுள்ளன.
விமர்சனம்
இதுகுறித்து செய்தியாளர்களை பேசிய பாஜக எம்.எல்.ஏ. வானதி சீனிவாசன் "தேர்தல் ஆணையத்தின் தேர்தல் தேதி அறிவிப்பைக் கூட காங்கிரஸ், தி.மு.க. உள்ளிட்ட கட்சிகள் அரசியலாக்கி விமர்சனம் செய்கிறார்கள்.
தேர்தல் தேதியை தெரிந்து கொண்டுதான் பிரதமர் தமிழகத்திற்கு வருகிறார் என்கிறார்கள். அவர் தமிழகத்திற்கு வரும் போதெல்லாம் கேரள மாநிலத்திற்கும் செல்கிறார். கேரளாவில் நமக்குப் பின்னர்தான் தேர்தல் நடக்கிறது. தேர்தல் ஆணையத்தின் மீது பழி போடுவது என்பது தேர்தலுக்கு முன்னதாகவே தோல்வியை ஒப்புக்கொள்ளும் செயலாக நாங்கள் பார்க்கிறோம்" என்று விமர்சித்துள்ளார்.