"இதற்குமேலும் 'இந்தி'யா? தாங்குமா இந்தியா?"- ஆங்கிலத்திற்கு மாற்றாக இந்தி என்ற அமித்ஷாவின் கருத்துக்கு வைரமுத்து கண்டனம்
ஆங்கிலத்திற்கு மாற்றாக இந்தி என்ற அமித்ஷாவின் கருத்துக்கு கவிஞர் வைரமுத்து ட்விட்டரில் கண்டனம் தெரிவித்துள்ளார்.
டெல்லியில் நடைபெற்ற பாரளுமன்ற அலுவல் மொழிக் குழுவின் 37-வது கூட்டத்தில் நேற்று பேசிய மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா,
இந்தி மொழியானது மத்திய அமைச்சரவையின் 70 சதவீத நிகழ்ச்சி பற்றிய தொகுப்புகள் எல்லாம் இந்தி மொழியில் உருவாக்கப்படுள்ளது. வட மாநிலங்களில் 22,000-க்கும் அதிகமான இந்தி ஆசிரியர்கள் பணியில் அமர்த்தப்பட்டுள்ளனர்.
இந்திய பள்ளியில் பயிலும் 9-ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு இந்தி மொழியை கற்பிக்க வேண்டும் அதே போல் இந்தி தேர்வுகளில் அதிக கவனம் செலுத்த வேண்டும் எனக் கூறினார்.
மேலும், இந்தி மொழியினை இந்திய நாட்டின் ஒருமைப்பாட்டின் முக்கிய அங்கமாக மாற்றுவதற்கான நேரம் வந்துவிட்டதாகவும், இந்தி மொழியை உள்ளூர் மொழிகளுக்கு மாற்றாக அல்ல ஆங்கிலத்திற்கு மாற்றாக ஏற்க வேண்டும் என கூறிய அமித்ஷா,
வெவ்வேறு மொழிகளைப் பேசும் மாநில மக்கள் ஒருவருக்கொருவர் தொடர்பு கொள்ளும்போது, அது இந்தியாவின் மொழியில் இருக்க வேண்டும் என தெரிவித்தார்.
அமித்ஷாவின் இந்த கருத்துக்கு பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், கவிஞரும், திரைப்பட பாடலாசிரியருமான வைரமுத்து தனது கண்டனத்தை ட்விட்டரில் பதிவு செய்துள்ளார்.
அந்த பதிவில்,
வடக்கே வாழப்போன தமிழர்
இந்தி கற்கலாம்
தெற்கே வாழவரும் வடவர்
தமிழ் கற்கலாம்
மொழி என்பது
தேவை சார்ந்ததே தவிர
திணிப்பு சார்ந்ததல்ல
வடமொழி ஆதிக்கத்தால்
நாங்கள் இழந்த நிலவியலும் வாழ்வியலும் அதிகம்
இதற்குமேலும் இந்தியா?
தாங்குமா இந்தியா? " என்று குறிப்பிட்டுள்ளார்.