"மேலும் 2 நாட்களுக்கு சிறப்பு திட்டம் நீட்டிப்பு" - சென்னை மாநகராட்சி அதிரடி அறிவிப்பு
கோவக்ஸின் தடுப்பூசியின் இரண்டாம் தவணை செலுத்திக் கொள்ள மேலும் இரண்டு நாட்கள் கால நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளதாக சென்னை மாநகராட்சி அறிவித்துள்ளது.
தமிழகத்தில் கொரோனாவால் பாதிப்பு ஏற்படுவதை தடுக்க அனைத்து மாவட்டங்களிலும் தடுப்பூசி போடும் பணி மும்முரமாக நடைபெற்று வருகிறது.
இதனிடையே சென்னை மாநகராட்சி சார்பில் கோவக்ஸின் இரண்டாம் தவணை தடுப்பூசி செலுத்திக் கொள்ளாத நபர்களுக்கு ஜூன் 23 மற்றும் 24 ஆகிய தேதிகளில் சிறப்பு ஏற்பாடு செய்யப்பட்டது.
இந்நிகழ்வில் 8880 நபர்கள் பயன் அடைந்துள்ளதாகவும், மேலும் இந்த சிறப்பு முகாம் இரண்டு நாட்கள் நீட்டிக்கப்பட்டுள்ளது தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே கோவக்ஸின் தடுப்பூசியின் இரண்டாவது தவணை செலுத்தி கொள்ளாதவர்கள் மாநகராட்சியின் தடுப்பூசி மையங்களுக்கு சென்று பயனடையுமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேசமயம் இரண்டாம் தவணை தடுப்பூசி செலுத்த தவறிய நபர்களின் விவரங்கள் சேகரிக்கப்பட்டு அவர்களுக்கு தொலைபேசி வாயிலாக தகவல் தெரிவிக்கப்பட்டு இரண்டாம் தவணை தடுப்பூசி செலுத்திக் கொள்ள அறிவுறுத்தி வருவதாகவும் மாநகராட்சி சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.