இந்துக்கள் மட்டுமே நுழைய முடியும் - உத்தராகண்ட் கோவிலில் ஒட்டப்பட்ட போஸ்டரால் சர்ச்சை
உத்தராகண்ட் மாநிலத்தில் பாரதிய ஜனதா கட்சி ஆட்சியில் உள்ளது. திரத் சிங் ராவத் என்பவர் முதல்வராக உள்ளார். சமீபத்தில் உத்தராகண்ட் மாநிலத்தில் சர்ச்சைக்குரிய பல்வேறு சம்பவங்கள் நிகழ்ந்துள்ளன. உத்தராகண்ட் மாநிலத்தில் உள்ள கோவில்களில் இந்து அல்லோதோர் நுழைய கூடாது என உள்ளூர் மத அமைப்பு ஒன்று பல கோவில்களில் பேனர் வைத்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சமீபத்தில் உத்தரபிரதேச மாநிலம் காஜியாபாத் மாவட்டத்தில் உள்ள இந்து கோவில் ஒன்றில் முஸ்லீம் சிறுவன் தண்ணீர் குடித்ததற்காக தாக்கப்பட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது. இதனைத் தொடர்ந்து உத்தரகாண்ட் மாநிலத்தைச் சேர்ந்த 'இந்து யுவா வாகினி' என்ற அமைப்பு இந்து கோவில்களில் இந்து அல்லாதவர்கள் நுழைய கூடாது என்று அறிவிக்கும் வகையில் பேனர்களை தயாரித்து நூற்றுக்கும் மேற்பட்ட கோவில்களில் வைத்துள்ளனர்.
இந்த சம்பவம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில் கோவில்களில் இருந்த சர்ச்சைக்குரிய பேனர்கள் நீக்கப்பட்டதுடன், இதை செய்த இந்து யுவா வாகினி அமைப்பினர் மீதும் பல்வேறு பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது.