உ.பி முதல்வர் யோகி ஆதித்யநாத் அடுத்த சர்ச்சை.. இந்த முறை என்ன பேசினார்?
உத்திரப் பிரதேச பாஜக முதல்வர் யோகி ஆதித்யநாத் பல்வேறு சர்ச்சைகளுக்குச் சொந்தக்காரர். அவர் தேர்தல் பிரச்சாரத்திற்கு செல்கின்ற இடங்களில் எல்லாம் பேசும் விஷயங்கள் சர்ச்சைகளாகவே முடிந்துள்ளன. இந்நிலையில் தற்போது இந்தியப் பாரம்பரியத்துக்கு ' மதச்சார்பின்மை ' தான் மிகப்பெரிய அச்சுறுத்தலாக உள்ளது என உத்தர பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் பேசியுள்ளார்.
உத்தரப் பிரதேசத்தில் 'அயோத்தி ஆராய்ச்சி மையம்' சார்பில் ராமாயணம் குறித்துக் கலை களஞ்சியம் மற்றும் புத்தகங்கள் வெளியிடும் நிகழ்வில் முதல்வர் யோகி ஆதித்யநாத் கலந்துகொண்டார். அப்போது பேசிய அவர், ”இந்திய பாரம்பரியத்தை உலகளவில் கொண்டு செல்ல மதச்சார்பின்மைதான் பிரச்சனையாக உள்ளது.
ராமர் தன்னுடைய தம்பி மகனை தற்போது பாகிஸ்தான் உள்ள பகுதிக்கு அரசராக நியமித்தார். ஆனால் சிலரோ ராமர் அயோத்தியை ஆட்சி செய்தாரா என்று கேட்கின்றனர். அவர்களுக்கு நான் சொல்வதெல்லாம் வரலாற்றை யாராலும் மறுக்க முடியாது” எனக் கூறியுள்ளார்.