விண்வெளியில் ஆயுதங்கள் வைத்துள்ளதை ஒப்புக்கொண்ட அமெரிக்கா
விண்வெளியில் ஆயுதங்கள் வைத்துள்ளதாக அமெரிக்கா முதல்முறையாக ஒப்புக்கொண்டுள்ளது.
விண்வெளியில் ஆயுதங்களை வைத்துள்ள அமெரிக்கா
தகவல் தொடர்பு, அறிவியல் ஆய்வு, வானிலை கண்காணிப்பு உள்ளிட்ட பல்வேறு நோக்கங்களுக்காக உலக நாடுகள், விண்வெளிக்கு செயற்கைக்கோள்களை அனுப்பி ஆய்வு செய்து வருகின்றன.
இந்நிலையில், விண்வெளியில் ஆயுதங்களை நிறுத்தியுள்ளதாக அமெரிக்கா முதல்முறையாக ஒப்புக்கொண்டுள்ளது.
விண்வெளி மற்றும் இணைய மாநாட்டில் பேசிய அமெரிக்க விமானப்படைச் செயலர் ட்ராய் மெய்ங்க், “விரோதமான எதிரிகளின் நடவடிக்கைகளிலிருந்து கூட்டுப் படையைப் பாதுகாக்கக்கூடிய, சுற்றுப்பாதையில் உள்ள விண்வெளிக் கட்டுப்பாட்டு ஆயுதங்களை அமெரிக்கா கொண்டுள்ளது” என தெரிவித்துள்ளார்.

மேலும், விண்வெளிக் கட்டுப்பாட்டுத் திறன்கள் ஒரு எதிரியைப் பாதிக்க இயக்கவியல் மற்றும் இயக்கவியல் அல்லாத வழிமுறைகள் இரண்டையும் பயன்படுத்தக்கூடும், அவை தாக்குதல் மற்றும் தற்காப்பு நோக்கங்களுக்காக பயன்படுத்தப்படலாம் என தெரிவித்துள்ளார்.
எதிர்காலத்தில் சாத்தியமுள்ள மோதலில் அமெரிக்க செயற்கைக்கோள்களைத் தாக்கிச் செயலிழக்கச் செய்வதற்கான வழிகளை ரஷ்யாவும் சீனாவும் உருவாக்கி வருவதைச் சுட்டிக்காட்டி, விண்வெளியில் இராணுவத் திறன்களை அதிகரிக்கத் திட்டமிட்டுள்ளதாக மூத்த இராணுவத் தலைவர்கள் கூறியிருந்தனர்.
ஆனால், எந்த வகையான ஆயுதங்கள், ஆயுதங்களின் எண்ணிக்கை, அதன் இருப்பிடம், எப்போது நிலைநிறுத்தப்பட்டது உள்ளிட்ட விவரங்களை வெளியிடவில்லை.
இதற்கு எதிர்வினையாற்றியுள்ள சீன வெளியுறவு அமைச்சக செய்தி தொடர்பாளர், "அமெரிக்கத் தரப்பு தனது இராணுவத் திறன்களை விரிவுபடுத்துவதையும், விண்வெளியில் போருக்குத் தயாராவதையும் நிறுத்த வேண்டும் என்று நாங்கள் வலியுறுத்துகிறோம்" என தெரிவித்துள்ளார்.