மல பாக்டீரியா சர்ச்சை; குளிக்க மட்டுமல்ல குடிக்கக்கூட செய்யலாம் - யோகி ஆதித்யநாத் உறுதி!
பிரயாக்ராஜில் உள்ள ஆற்று நீர் குளிப்பதற்கு ஏற்றது என யோகி ஆதித்யநாத் தெரிவித்துள்ளார்.
கும்பமேளா
உத்தரப்பிரதேசம், பிரயாக் ராஜில், கடந்த ஜனவரி 13ஆம் தேதி கும்பமேளா தொடங்கி நடைபெற்று வருகிறது. உலகம் முழுவதும் இருந்து கோடிக்கணக்கான பக்தர்கள் படையெடுத்த வண்ணம் உள்ளனர்.
45 கோடி பக்தர்கள் வருகை தருவார்கள் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், பக்தர்கள் எண்ணிக்கை தற்போது 56 கோடிக்கும் மேல் தாண்டியுள்ளது. இன்னும் 6 நாட்கள் நடைபெறும் இந்த நிகழ்வில் தொடர்ந்து பக்தர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும் என கருதப்படுகிறது.
தொடர்ந்து, கோடிக்கணக்கானோர் நீராடியதால் மனிதக் கழிவுகள் அதிகளவில் ஆற்று நீரில் கலந்திருப்பதாகவும், இதன் காரணமாக அவற்றின் வழியே பரவும் ‘ஃபீக்கல் கோலிஃபார்ம்’ நுண்ணுயிரிகளால் நோய்கள் பரவும் அபாயம் இருப்பதாக நடவடிக்கை எடுக்க தேசிய பசுமைத் தீர்ப்பாயம் உத்தரவிட்டது.
முதல்வர் உறுதி
இந்நிலையில், இதுகுறித்துப் பதிலளித்த உத்தப்பிரதேச மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத், "பிரயாக்ராஜ் ஆற்று நீர் குளிப்பதற்கு ஏற்றதுதான். ஏன் குடிக்கவும் தான். இதுபோன்ற அறிக்கைகள், மகா கும்பமேளாவை அவமதிக்கும் பிரசாரம். ஏனெனில் இந்த நிகழ்வு ஒரு கட்சியாலோ அல்லது ஒரு அமைப்பினாலோ ஏற்பாடு செய்யப்பட்டது அல்ல.
இது சமூகத்திற்கானது. அரசு, ஒரு ஊழியராக தனது கடமையை மட்டுமே செய்கிறது. இந்த முறை மகா கும்பமேளாவுக்கு கடமைகளைச் செய்யும் பொறுப்பு, நமக்கு கிடைத்திருக்கிறது. தவறான பிரசாரங்களை விடுத்து கோடிக்கணக்கான மக்கள் நிகழ்வில் பங்கேற்று இதனை வெற்றியடையச் செய்திருக்கிறார்கள்.
நெரிசலில் பாதிக்கப்பட்ட மற்றும் கும்பமேளாவில் உயிரிழந்தவர்களுக்கும் அரசாங்கம் எல்லா வழிகளிலும் உதவும். ஆனால் இதை அரசியலாக்குகின்றனர்” எனத் தெரிவித்துள்ளார்.