தொழுகை நடத்த பஸ்ஸை நிறுத்திய கண்டக்டர் - ரயில் முன் பாய்ந்து தற்கொலை!
நடத்துனர் பணி நீக்கம் செய்யப்பட்ட நிலையில் தற்கொலை செய்துள்ளார்.
பணி நீக்கம்
உத்தர பிரதேசம், மனிப்பூரியைச் சேர்ந்தவர் மோஹித் யாதவ். இவர் மாநில போக்குவரத்து கழகத்தில் ஒப்பந்த அடிப்படையில் நடத்துனராக பணியாற்றி வந்தார்.
கடந்த ஜூன் மாதம் பரேலியில் இருந்து டெல்லி சென்ற பேருந்தில் பணியில் இருந்த இவர், பேருந்தில் பயணித்துக் கொண்டிருந்த இரண்டு இஸ்லாமியர்கள் நமாஸ் செய்வதற்கு பேருந்தை சாலையோரம் இரண்டு நிமிடம் நிறுத்தியுள்ளார்.
தற்கொலை
அப்போது, பேருந்தில் இருந்த சிலர் அதற்கு மறுப்பு தெரிவித்துள்ளனர். இதனை பேருந்திலிருந்த பயணி ஒருவர் வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் பரப்பியதாக தெரிகிறது.
அது வைரலான நிலையில், உபி போக்குவரத்து துறை அவரை பணி நீக்கம் செய்து உத்தரவிட்டிருந்தது. அதன்பின், அவர் பல்வேறு இடங்களில் வேலைக்கு முயற்சித்த போதும், கிடைக்கவில்லையென கூறப்படுகிறது.
இதனால் மன உளைச்சலில் இருந்த அவர், ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்துகொண்டார். இது குறித்து அவரது மனைவி ரிங்கி, ”என் கணவர், மனிதாபிமானத்துக்கான விலையை கொடுத்துள்ளார்” என்று வேதனையுடன் தெரிவித்துள்ளார். நடத்துநர் இந்து என்பது குறிப்பிடத்தக்கது.