உத்தர பிரதேச வரி ஏய்ப்பு விவகாரம் ; தொழிலதிபர் பியூஷ் ஜெயின் கைது - சுமார் 257 கோடி பறிமுதல் என தகவல்
உத்தர பிரதேசத்தில் வருமான வரித் துறையினர் நடத்திய சோதனையில் கோடிக்கணக்கில் பணம் கைப்பற்ற நிலையில் நேற்று சமாஜ்வாதி கட்சியைச் சேர்ந்த தொழிலதிபர் பியூஷ் ஜெயின் கைது செய்யப்பட்டார்.
உத்தர பிரதேச மாநிலம் கான்பூரைச் சேர்ந்த தொழிலதிபர் பியூஷ் ஜெயின். இவர், திருமூர்த்தி பிராக்ரன்ஸ் பிரைவேட் லிமிடெட் என்ற பெயரில் நறுமண திரவியம் தயாரித்து உள்நாடு மற்றும் வெளிநாடுகளில் விற்பனை செய்து வருகிறார்.
இவர் ஜிஎஸ்டி மற்றும் வருமான வரிஏய்ப்பில் ஈடுபட்டு வருவதாக வருவாய் புலனாய்வு துறையினருக்கு தகவல் கிடைத்ததையடுத்து,
ஜிஎஸ்டி புலனாய்வு துறை அதிகாரிகள், வருமான வரித் துறை அதிகாரிகள் இணைந்து பியூஷ் ஜெயினுக்கு சொந்தமான இடங்களில் திடீர் சோதனை மேற்கொண்டனர்.
அகமதாபாத் ஜிஎஸ்டி நுண்ணறிவு இயக்குநர் ஜெனரல் கூறுகையில், “சோதனையின் போது மொத்தம் ரூ. 187.45 கோடி பணம் மீட்கப்பட்டது. மேலும் ரூ.10 கோடி பின்னர் கைப்பற்றப்பட்டது.

இதில் கன்னாஜில் உள்ள அவரது தொழிற்சாலையில் இருந்து ரூ.5 கோடியும், அவரது வீட்டில் இருந்து ரூ.5 கோடியும் மீட்கப்பட்டது.
ஜெயின் தொழிற்சாலையில் கணக்கில் வராத சந்தன எண்ணெய், பல கோடி மதிப்புள்ள வாசனை திரவியங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன” எனத் தெரிவித்தார்.
இதுகுறித்து உத்தரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் கூறுகையில்,
“கடந்த சில நாட்களாக சமாஜ்வாதி கட்சிக்கு தொடர்பான இடங்களில் சோதனை நடைபெற்று வருகிறது. இதுவரை சுமார் 257 கோடி ரூபாய் ரொக்கம் மற்றும் பல கிலோ தங்கம் மற்றும் வெள்ளி மீட்கப்பட்டது.
இந்த பணம் ஏழைகளுக்கு சொந்தமானது. அது எப்படி கொள்ளையடிக்கப்பட்டது என்பதற்கும் ஆதாரம் உள்ளது” எனத் தெரிவித்தார்.
இதையடுத்து பியூஷ் ஜெயின் கைது செய்யப்பட்டுள்ளார். இதுகுறித்து அதிகாரிகள் கூறுகையில்,
“இவ்வளவு பெரிய தொகை ஏன் வசூலிக்கப்பட்டது. ஏன் இங்கு இருக்கிறது. இவ்வளவு பணம் எங்கிருந்து வந்தது என்று தெரிய வேண்டும். ஆனந்தபுரி, கான்பூர், ஆகிய இடங்களில் ரூ. 177.45 கோடி மீட்கப்பட்டது.
இப்பணம் தொழில் ரீதியில் பயன்படுத்த வைக்கப்பட்டிருந்ததா? அல்லது வேறு ஏதேனும் நோக்கத்திற்காக பயன்படுத்தப்பட்டதா? என்பது குறித்து விசாரித்து வருகிறோம். அதற்கான முடிவு தெரியும் வரை விசாரணை தொடரும்” எனத் தெரிவித்தனர்.