தின்பண்டம் வழங்குவதில் தீண்டாமை - குற்றவாளிகள் 6 மாதங்கள் ஊருக்குள் நுழைய தடை
தென்காசி மாவட்டம் பாஞ்சாங்குளத்தில் மாணவர்களுக்கு தின்பண்டம் தராமல் எழுந்த தீண்டாமை புகாரில் குற்றவாளிகள் ஊருக்குள் நுழைய 6 மாதம் தடை விதித்து நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.
தீண்டாமை புகார்
தென்காசி மாவட்டம், சங்கரன்கோவில் அருகே உள்ள பாஞ்சாங்குளம் என்ற கிராமத்தில் பட்டியலின சிறுவர்கள் அங்குள்ள பெட்டிக்கடையில் தின்பண்டம் வாங்க சென்ற போது கடை உரிமையாளர் மகேஸ்வரன்,
அந்த சிறுவர்களிடம் ஊர் கட்டுப்பாடுகளை விதித்துள்ளதால் உங்களுக்கு தின்பண்டம் தர முடியாது எனக் கூறி இதை உங்கள் வீட்டில் உள்ளவர்களிடம் போய் சொல்லுங்கள் என்று கூறும் வீடியோ காட்சிகள் வெளியான நிலையில், மாவட்ட ஆட்சியரின் பேரில் கோட்டாட்சியர் சுப்புலட்சுமி பெட்டிக்கடைக்கு சீல் வைத்தார்.
இந்த நிலையில் கடை உரிமையாளர் மகேஸ்வரன், மற்றும் ராமசந்திரமூர்த்தி ஆகிய இருவரை போலீசார் கைது செய்தனர்.
இந்த விவகாரத்தில் 5 பேர் மீது இந்திய தண்டனை சட்டம் 153(A), 147, 294, 506, 153, 377, உள்ளிட்ட பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது.
இந்த நிலையில் குற்றவாளிகள் 6 மாதங்கள் ஊருக்குள் நுழைய தடை விதித்து நெல்லை மாவட்ட நீதிபதி பத்மநாபன் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
தமிழ்நாட்டில் முதல் முறையாக வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் குற்றவாளிகளை ஊருக்குள் நுழைய தடை விதிப்பது இதுவே முதல் முறை