பாஞ்சாங்குளம் பள்ளியிலும் தீண்டாமை? - மாணவர்கள் பரபரப்பு பேட்டி
தென்காசி பாஞ்சாங்குளம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியிலும் தீண்டாமை கொடுமை நடப்பதாக அப்பள்ளி மாணவர்கள் புகார் தெரிவித்துள்ளனர்.
தீண்டாமை புகார்
தென்காசி மாவட்டம், சங்கரன்கோவில் அருகே உள்ள பாஞ்சாங்குளம் என்ற கிராமத்தில் பட்டியலின சிறுவர்கள் அங்குள்ள பெட்டிக்கடையில் தின்பண்டம் வாங்க சென்ற போது கடை உரிமையாளர் மகேஸ்வரன்,
அந்த சிறுவர்களிடம் ஊர் கட்டுப்பாடுகளை விதித்துள்ளதால் உங்களுக்கு தின்பண்டம் தர முடியாது எனக் கூறி இதை உங்கள் வீட்டில் உள்ளவர்களிடம் போய் சொல்லுங்கள் என்று கூறும் வீடியோ காட்சிகள் வெளியான நிலையில், மாவட்ட ஆட்சியரின் பேரில் கோட்டாட்சியர் சுப்புலட்சுமி பெட்டிக்கடைக்கு சீல் வைத்தார்.
இந்த நிலையில் கடை உரிமையாளர் மகேஸ்வரன், மற்றும் ராமசந்திரமூர்த்தி ஆகிய இருவரை போலீசார் கைது செய்துள்ளனர். அவர்களை வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்த போலீசார் அவர்கள் மீது 4 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
இந்த நிலையில் முருகன், குமார், சுதா ஆகிய 3 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ள நிலையில் மேலும் தீண்டாமை கொடுமை நடைபெற்றுள்ளதா என வருவாய் துறை அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
பள்ளியிலும் தீண்டாமை?
பாஞ்சாங்குளம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் பயிலும் மாணவர்கள் பள்ளியில் தீண்டாமை கொடுமை நடப்பதாக தெரிவித்துள்ளனர். இது குறித்து செய்தி நிறுவனம் ஒன்றிற்கு பேட்டி அளித்த மாணவர்கள்,
இருக்கையில் அமர்வது, உணவுக்கு தட்டு வழங்குவது போன்றவற்றில் தீண்டாமை இருப்பதாகவும். இதை ஆசிரியர்கள் கண்டு கொள்வதில்லை என்றும் மாணவர்கள் புகார் தெரிவித்துள்ளனர்.
பள்ளியின் புத்தகத்தின் முதல் பக்கத்தில் தீண்டாமை ஒரு பாவச்செயல்…தீண்டாமை ஒரு பெருங்குற்றம்…
தீண்டாமை மனிததன்மையற்ற செயல்.. என்ற வாசகங்கள் இடம் பெற்றிருக்கும் ஆனால் அதை சொல்லி கொடுக்கும் ஆசிரியர்களே இதை கண்டு கொள்ளாதது தான் வேதனையின் உச்சம்.